Skip to main content

“பிரதமர் மோடிக்குப் பாராட்டு” - முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!

Published on 22/06/2025 | Edited on 22/06/2025

 

Congratulations to PM Modi Resolution passed at Murugan devotees conference

மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு இன்று (22.06.2025) நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய விழாவானது கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டையொட்டி கடந்த 10ஆம் தேதி முதல் இன்று வரை தினந்தோறும் அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோவில்களை அமைத்து தினந்தோறும் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், “திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும். தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும். கந்த சஷ்டி தினத்தன்று கந்த சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி (22.04.2025) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பாகிஸ்தானில் உள்ள  லஷ்கர்- இ - தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு தான் காரணம் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை இந்தியா மேற்கொண்டிருந்தது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் கூடாரங்கள் குறிவைத்து இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்