'Congratulations to the Muruga devotees' conference' - Edappadi Palaniswami interview

இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுவையில், ''கீழடி குறித்து தெளிவாக விளக்கமாக கழகத்தினுடைய கொள்கை பரப்பு துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமாக கீழடி அகழாய்வு குறித்து தெளிவான பதிலைக் கொடுத்திருக்கிறார். மீண்டும் நான் என்ன பதிலைக் கொடுக்க வேண்டும். நேற்றே எல்லாவற்றையும் கொடுத்து விட்டோம்.

ஜெயலலிதா இருக்கின்ற பொழுது என்னென்ன நடவடிக்கை எடுத்தார்கள். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக அரசு கீழடி அகழாய்வு ஆராய்ச்சிக்கு எப்படி எல்லாம் ஈடுபாடு காட்டியது என்ற விளக்கம் நேற்றைய தினமே தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விருப்பப்படுகின்ற தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புகின்ற கடவுள்களை சிறப்பிக்க அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்துகின்றார்கள். அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் 'தமிழக அமைச்சர்களும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் ஆபாசமாக பேசுவது அதிகமாக நடக்கிறது' என்ற கேள்விக்கு, ''நான் ஏற்கனவே இது குறித்துக் கண்டன அறிக்கை வெளியிட்டு விட்டேன். திமுகவை பொறுத்தவரை மக்களிடத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் மறைப்பதற்காக, மடை மாற்றம் செய்வதற்காக இப்படி கேலிச்சித்திரங்களை வெளியிடுவது, அவதூறுகளை வெளியிடுவது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்'' என்றார்.