Skip to main content

சேர்மன் பதவி மோதல்; ‘தீ குளிப்பேன்’ என மிரட்டும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்   

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Conflict over chairman position; Organizer of the Women's Volunteer who threatens

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றிய திமுக மகளிர் தொண்டரணியில் இருப்பவர் மஞ்சுளா. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். அங்கு சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் குடியாத்தம் ஒ.செ கல்லூர் ரவி மீது குற்றம்சாட்டி சமூக வளைத்தளங்களில் கடுமையாக கருத்து பதிவிட்டுள்ளார் மஞ்சுளா. அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பக்கத்து ஊராட்சியான தாட்டிமானபல்லியிலிருந்து பக்கத்து ஊரான கல்லப்பாடியில் போட்டியிட்டேன். ஆனால், நான் போட்டியிடுவதை விரும்பாத  குடியாத்தம் முன்னாள் ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி, ஒரு சுயேட்சை வேட்பாளரை தென்னை மர சின்னத்தில் நிற்கவைத்து தனது ஆளும் அதிகாரம் அத்தனையும் பயன்படுத்தி மிக வெளிப்படையாகவே எனக்கு எதிராக வேலை செய்து  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட என்னை தோற்கடித்தார். தலைவர் நல்லாட்சி, உதயசூரியன் சின்னம், பொதுமக்களின் அமோக ஆதரவு அத்தனை இருந்தும் கழகத்தின் உயர் பதவியை அனுபவித்துவரும் கல்லூர் ரவியால் நான் தோற்றுப்போய் நடுத்தெருவில் நிற்க வைக்கப்பட்டுள்ளேன்.

 

கட்சிக்கு துரோகம் செய்தவர் கட்சிப்பதவியில் நீடிக்கலாமா? இதைவிட மிகப்பெரிய துரோகம் வேறு ஏதாவது இருக்கிறதா? பெண்களின் பாதுகாவலரே எனக்கொரு நீதி சொல்லுங்கள். தற்போது கழகத்தின் சார்பில் கொண்டசமுத்திரம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற அண்ணன்  N.E.சத்யானந்தன் தான் ஒன்றிய பெருந்தலைவர் என்று, பொதுச்செயலாளரும் வேலூர் மாவட்ட கழக செயலாளரும் வாக்குறுதி அளித்த நிலையில் தலைமையை எதிர்த்து வேறு ஒரு வேட்பாளருக்கு கல்லூர் ரவி வேலை செய்கிறார். எனவே தலைமைக் கழகத்திற்கும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கும் வேலூர் மாவட்ட கழக செயலாளருக்கும் திமுகவினருக்கும் கல்லப்பாடி மஞ்சுளா ஆகிய நான் தெரிவித்துக்கொள்வது, சத்யானந்தனை ஒன்றிய பெருந்தலைவர் வேட்பாளராக வாக்குறுதி அளித்தபடி அறிவிக்கவில்லை என்றால் நாளை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் 100 பேர் முன்னிலையில் நான் தீக்குளிப்பேன். இங்ஙனம் கல்லப்பாடி மஞ்சுளா’ என்று பதிவிட்டுள்ளார். 

 

இதுகுறித்து நாம் மஞ்சுளாவிடம் கேட்டபோது, “நான் தீவிரமான கட்சி விசுவாசி, ஆக்டிவ் கள அரசியல்வாதி. அதனாலேயே என்னை கல்லூர் ரவிக்கு பிடிக்காது. நான் போட்டியிட்ட வார்டில் சுயேச்சையாக ஒருவர் போட்டியிடுகிறார். அவர் கல்லூர் ரவிக்கு வேண்டப்பட்டவர். அவருக்கு 2 கோடி ரூபாய்க்கு காண்ட்ராக்ட் தருகிறார். அவரை வாபஸ் வாங்கு எனச்சொல்லியிருந்தால் வாங்கியிருப்பார், ஆனால் வாங்கச் சொல்லவில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் அவருடன் கை குலுக்குகிறார். அதை வைத்துதான் சொல்கிறேன் அவருக்கு இவர் சப்போட். என்னை தோற்கடிக்க மறைமுகமாக கூட்டுவைத்துள்ளார். இப்போது அவரை திமுகவுக்கு கொண்டுவந்து துணைதலைவர் பதவி தருகிறேன் என வாக்குறுதி தந்து அழைத்துவருகிறார் இது நியாயமா” என்றார்.

 

இதுகுறித்து குடியாத்தம் திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, சேர்மன் பதவிக்காக துரைமுருகன் ஆதரவாளரான ஒ.செ கல்லூர் ரவிக்கும், மா.செ நந்தகுமார் எம்.எல்.ஏ ஆதரவாளரான மற்றொரு ஒ.செ சத்தியானந்தத்துக்கும் இடையே மோதல் நடக்கிறது. அந்த மோதலின் வெளிப்பாடுதான் ரவியை டேமேஜ் செய்து, சத்தியானந்தத்துக்கு ஆதரவாக மஞ்சுளாவின் மிரட்டல்போல் உள்ளது என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.