கன்னியாகுமரியில் ரம்ஜான் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் பண்டிகை, இந்தியா முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, மசூதிகளில் சிறப்பு தொழுகையும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரியில் மசூதியில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏற்கனவே முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே தகராறு இருந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினர். இது தொடர்பாக மேற்கொண்டு மோதல் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.