விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள அண்ணன் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் என்பவரின் மகன் ஹரிபிரசாத்(27). இவர், மருந்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தை விநாயகத்திற்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதேபோல் ஹரி பிரசாத்துக்கும் மதுப்பழக்கம் உண்டு. இருவரும் அவ்வப்போது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நேற்று இரவு, எட்டு மணி அளவில் வழக்கம் போல் தந்தை மகன் இருவரும் அளவுக்கு மீறி மது குடித்துள்ளனர். மேலும், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மகன் மீது கடும் ஆத்திரமடைந்த விநாயகம் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஹரிபிரசாத் தலை மற்றும் முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஹரிபிரசாத் முகம் முழுவதும் சிதைந்த நிலையில் மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.
சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஹரிபிரசாத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரசாத் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூர் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த தந்தை விநாயகத்தை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.