Skip to main content

இரு தரப்பு மீனவர்கள் இடையே மோதல்! என்ஜின்களை கழற்றி வீசியதால் பரபரப்பு! 

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Conflict between fishermen on both sides

 

நாகை அடுத்துள்ள நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால், ஒரு தரப்பினர் 7 பைபர் படகுகளில் இருந்த என்ஜின்களை ஆற்றில் தூக்கி வீசி ஆத்திரத்தை போக்கிக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மற்றொரு தரப்பு மீனவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அங்கு திரண்ட மீனவ பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழும் சம்பவம் பெருத்த வேதனையை உண்டாக்கியிருக்கிறது.

 

நாகை மாவட்டம், நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை விற்பனை மற்றும் ஏலம் விடுவதில் இரண்டு தரப்பு மீனவர்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. மேல பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களை நேரடியாக மீன் விற்பனை செய்வதற்கு அனுமதிக்காத கீழ பட்டினச்சேரியைச் சேர்ந்த கிராம நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், நாகூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேல பட்டினச்சேரி பகுதி மீனவர்களின் 7 பைபர் படகுகளில் இருந்த என்ஜின்களை மர்ம நபர்கள் ஆற்றில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து துறைமுகத்தில் திரண்ட ஏராளமான மேல பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். சுமார் 10 லட்சம் ரூபாய்  மதிப்பிலான என்ஜின்கள், வலைகளை நாசப்படுத்திவிட்டதாக மீனவர்கள் கலங்குகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்