
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில வாரங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இதுதொடர்பான வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ குற்றச்சாட்டுக்குள்ளான காவலர்களை கைது செய்து விசாரித்து வருகின்றது. இந்த விசாரணை அதிகாரிகளில் நால்வருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.