Skip to main content

‘ட்ரான்ஸ் கிச்சன்’ கொலை வழக்கு குற்றவாளியின் வாக்குமூலம்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

Confession of the culprit in the 'Trans Kitchen case!


கோவை ‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் 23 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சங்கீதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதற்கு சங்கீதா காவல்துறையில் புகார் கொடுத்துவிடுவேன் எனத் தெரிவித்ததால் அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா, கோவை சாய்பாபா காலனியில் வசித்துவந்துள்ளார். இவர் ஆர்.எஸ். புரம் பகுதியில் திருநங்கைகளுக்காக ட்ரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் பிரத்தியேக உணவகத்தை நடத்திவந்தார். இந்த உணவகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களே பணியில் இருந்துள்ளனர்.


இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருடன் தொலைப்பேசியில் கடைசியாகப் பேசியுள்ளார். அதற்குப் பிறகு அவரை தொடர்புகொள்ள முடியாமல் அவரது உணவகப் பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர் எங்காவது ஊருக்குச் சென்றிருப்பார் என அவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், இரண்டு நாட்களாக அவரை தொடர்புகொள்ள முடியாததால், புதன்கிழமை காலை அவரது வீட்டிற்குச் சென்று அவரது நண்பர்கள் பார்த்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால், அவர்கள் சாய்பாபா காலனி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். 


அதனைத் தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினர். சங்கீதாவின் வீட்டிற்குள் சென்று துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது எனத் தேடி பார்த்தபோது, தண்ணீர் பிடித்துவைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து வருவதை உணர்ந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதை சோதனை செய்தபோது, சங்கீதாவின் உடல் அதில் இருந்தது தெரியவந்தது. அவரது உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்களும், கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட காயமும் இருந்துள்ளது. இதனால் இதை கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்து, சங்கீதாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

 

இந்த கொலை வழக்குத் தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திவந்தனர். அதில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த, ராஜேஷ் (23) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

cnc

 

பிடிப்பட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனது முகநூல் மூலம் சங்கீதா மற்றும் அவர் நடத்தி வரும் உணவகம் குறித்து தெரியவந்தது. அதன்மூலம் தனக்கு வேலை வேண்டும் எனக் கூறி சங்கீதாவிடம் பேசியுள்ளார். பிறகு அவரது உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அதன்பிறகு சங்கீதாவுக்கு பாலியல் ரீதியாகத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், காவல்துறையிடம் புகார் தந்துவிடுவேன் என சங்கீதா தெரிவித்துள்ளார். அதானால், அவரை கொலை செய்தேன். பின் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்மில் சங்கீதாவின் உடலை மறைத்து வைத்தேன் எனத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.