Skip to main content

“பேருந்தை நிறுத்த முடியாது...” - பெண் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடத்துநரால் பரபரப்பு!

Published on 16/06/2025 | Edited on 16/06/2025

 

Conductor causes a stir after arguing with female passenger The bus cant be stopped
மாதிரிப்படம்

கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பகல் மற்றும் இரவு நேரத்தில் சேலத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் ஈரோடு மாவட்டம் சித்தோடு வழியாக செல்லும் என பஸ்சின் முன்பு எழுதப்பட்டிருந்தாலும் ஒரு சில பஸ்கள் சித்தோடு வழியாக செல்லாமல் பைபாஸ் வழியாக செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று (15.06.2025) இரவு 12 மணி அளவில் திருப்பூரில் இருந்து சேலம் செல்லும் பஸ் கிளம்பி சென்றது. இந்த பஸ்ஸில் சித்தோடு செல்வதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பஸ்சில் ஏறி உள்ளார். இந்த அரசு பஸ்சில் சித்தோடு என்று ஸ்டிக்கர் முன்பகுதியில் ஒட்டப்பட்டு இருந்தது. அந்தப் பெண் பயணி பஸ்ஸில் ஏறும்போது, ஸ்சின் டிரைவரிடம், “இந்த பஸ் சித்தோடு செல்லுமா?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவரும் ஏறி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் பயணி பஸ்சில் ஏறி பயணம் மேற்கொண்டிருந்தார். பஸ் சிறிது தூரம் சென்றதும் அந்த பஸ்சின் கண்டக்டர் அந்தப் பெண் பயணியிடம் யாரை கேட்டு பஸ்சில் ஏறினீர்கள்?. சித்தோடு எல்லாம் யார் ஏற சொன்னது?. பஸ் சித்தோடு செல்லாது இறங்கிக் கொள்ளுங்கள் என அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அந்தப் பெண் நான் தனியாக வந்துள்ளேன். பஸ்சின் முன் பகுதியில் சித்தோடு என்று எழுதி உள்ளது அதுமட்டுமில்லாமல் டிரைவரிடம் கேட்டு தான் பஸ்ஸில் ஏறினேன் என்ற அந்த பெண் கூறினார். அதுக்கு கண்டக்டர், டிரைவர் இடம் கேட்கக் கூடாது என்னிடம் தான் கேட்க வேண்டும் நான் தான் இந்த பஸ் எங்கு நிற்கும் என்று கூறுவேன் என்றார்.

இதை அந்தப் பெண் செல்போனில் படம் எடுத்த போது பஸ்ஸில் கண்டக்டர் நான் ஒன்றும் சித்தோடு செல்லும் என்று கூறவில்லை என்று கூறினார். பின்னர் பஸ் அங்கிருந்து சென்று விட்டது. நடந்த சம்பவத்தை அந்தப் பெண் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “இதேப் போல் பலமுறை கோவை, திருப்பூர் வழியாக சேலம் செல்லும் பஸ்களில் நடந்து வருகிறது. தனியாக வந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்த நடத்துனர், மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பஸ்களிலும் சித்தோடு என்று ஸ்டிக்கர் இருந்தது. தற்பொழுது பல பஸ்களில் அந்த ஸ்டிக்கரை எடுத்து விட்டனர். மீண்டும் பஸ்களில் அந்த ஸ்டிக்கரை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அரசு போக்குவரத்து கழகம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சித்தோடு வழியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்