Skip to main content

லட்சக்கணக்கில் பணம்; அப்பாவி தம்பதிகளை ஏமாற்றிய கருத்தரிப்பு மையம் - அம்பலமான உண்மை

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

conception center that cheated so many couples by taking lakhs of money

 

குழந்தையில்லாமல் ஏக்கத்தில் இருந்த அப்பாவி தம்பதிகள் பிரபல கருத்தரிப்பு மையத்தை நம்பி பல லட்சங்களை இழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பணகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். முத்துக்குமாருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. ஆனால், கடந்த 6 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் முத்துக்குமாரும் அவரது மனைவியும் மிகுந்த ஏக்கத்தில் இருந்து வந்துள்ளனர். குழந்தை வரம் வேண்டி கோயில், குளம் எனச் சுற்றிய பிறகும் எந்தப் பயனும் இல்லை என்று சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் டிவியில் வந்த ஒரு தனியார் கருத்தரிப்பு மையம் குறித்த விளம்பரங்களை பார்த்துள்ளனர். அதில், சிலருடைய போட்டோக்களை வைத்து, "வெறும் 99 ஆயிரம் ரூபாய் செலவில் குழந்தையில்லாத இவர்களுக்கு எங்களுடைய ஏ.ஆர்.சி. கருத்தரிப்பு மையம் மூலம் குழந்தை பிறந்துள்ளது" எனப் பல்வேறு விளம்பரங்களை செய்துள்ளனர்.

 

இதை உண்மை என நம்பிய அப்பாவி தம்பதி, நாகர்கோவிலில் உள்ள அந்த கருத்தரிப்பு மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கே முத்துக்குமாரிடமும் அவரது மனைவியிடமும் ஐ.வி.எஸ். டெஸ்ட் எடுக்க வேண்டும் எனச் சொல்லி ஆரம்பத்திலேயே 99 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளனர்.  அந்த பரிசோதனை முடிவில், "உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நூறு சதவீதம் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது" எனக் கூறியுள்ளனர். அதன்பிறகு, “உங்களுக்கு இரட்டைக்குழந்தை வேண்டுமென்றால் 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவாகும்" எனக் கூறியுள்ளனர். அதையும் உண்மை என நம்பிய முத்துக்குமார் தம்பதி, குழந்தையின் மேல் கொண்ட ஆசையில் அந்த பணத்தையும் கொடுத்துள்ளனர்.

 

இதையடுத்து, அந்த கருத்தரிப்பு மையம் தங்களது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது. முத்துக்குமார் தம்பதியை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் இழுத்தடித்துள்ளனர். ஒருபுறம், ஏராளமான டெஸ்டுகளை எடுக்கச் சொல்லி எக்கச்சக்க பணத்தை பிடுங்கியுள்ளனர். இவர்களும் குழந்தையின் மேல் கொண்ட ஆசையால் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியும் நகைகளை விற்றும் 11 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். அதே சமயம், முத்துக்குமார் தம்பதியுடன் சேர்த்து அந்த கருத்தரிப்பு மையத்தில் மொத்தம் 9 பேர் குழந்தை பாக்கியம் தேடி வந்துள்ளனர். அவர்களுக்கும் அதே நிலைமை தான்.

 

இதில், கடைசிக்கட்டமாக கருமுட்டையை வைத்து பரிசோதனை செய்ததில் முத்துக்குமார் தம்பதிக்கு நெகடிவ் என்று ரிசல்ட் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த 9 பேருக்கும் ஒரே தகவலை தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். வாங்கிய கடனிற்கு பதில் சொல்ல முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளனர். அதே சமயம், பணத்திற்காக இத்தகைய விஷயங்களை ஆரம்பத்தில் இருந்தே அந்த கருத்தரிப்பு மையம் மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அனைவரும் பல லட்சங்களை இழந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தம்பதியின் வாழ்க்கை விவாகரத்து வரை சென்றுள்ளது.

 

இது குறித்து அந்த கருத்தரிப்பு மையத்திடம் விளக்கம் கேட்டபோது, "எங்களோட ட்ரீட்மென்ட்ல எந்த தவறுமில்ல. எங்க ஹாஸ்பிட்டல்ல பேஷண்ட்டோட உடல்நிலைய பொறுத்துத்தான் ட்ரீட்மெண்ட் கொடுப்போம். அது சில பேருக்கு சக்ஸஸ் ஆகியிருக்கு. சில பேருக்கு பெயிலியர் ஆகியிருக்கு" எனக் கூறி முடித்துக் கொண்டனர். ஆனால், குழந்தை ஆசையால் பணத்தை இழந்தவர்கள் கண்களில் கண்ணீரோடு பரிதவித்து நிற்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.