Complaint that Mr. Vijayabaskar has usurped land worth Rs.100 crores

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா குப்பிச்சிப்பாளையத்தைச்சேர்ந்தவர் தொழிலதிபர் பிரகாஷ். இவர் நமக்கல் மற்றும் பரமத்தில் வேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை ஏமாற்றி ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துகொண்டதாக பிரகாஷ் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் கொடுத்தப் புகார் மனுவில், “முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது. அவர் அமைச்சராக இருந்தபோது, பல நிறுவனங்களிடம் இருந்து பணம் வாங்கி ரூ.10 கோடி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் அவரது தம்பி சேகருக்கும் வட்டிக்கு கடனாக கொடுத்தேன். மாத வட்டியாக ரூ.15 லட்சம் பணத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து கொடுக்காததால், அவரது வீட்டிற்கு சென்று பணத்தை வட்டியோடு கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு என்னை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடித்து, ஆபாசமாக பேசி அனுப்பிவிட்டார்.

Advertisment

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு கரூர் உத்தமி பொன்னுச்சாமி திருமண மண்டபம் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு வரச்சொன்ன விஜயபாஸ்கர், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் உள்ள எனது ₹100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அவர் சொல்லும் நான்கு பேருக்கு எழுதி தரும்படி கேட்டு மிரட்டினார். நான் எதற்காக உங்களுக்கு எழுதித்தர வேண்டும்? முடியாது, நான் கொடுத்த பணத்தை வட்டியுடன் கொடுத்து விடுங்கள் என்று சொன்னவுடன், “ஏன்டா... நான் அமைச்சராக இருந்தபொழுது என் செல்வாக்கை பயன்படுத்தி உன் வியாபாரத்தில் கொள்ளை லாபம் அடித்து வாங்கிய சொத்துகள் தானடா அவைகள், அவற்றை எழுதிக்கொடுக்கச் சொன்னால் முடியாது என்கிறாயா” என்று சொல்லி என்னை கன்னத்தில் அடித்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால் கடந்த பிப்ரவரி மாதம் எனது மகள் ஷோபனா பெயருக்கு எனது சொத்துக்களைசெட்டில்மெண்ட் எழுதி வைத்தேன். ஆனால், விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது மகள் ஷோபனா மற்றும் என் மனைவியை மிரட்டி, போலி ஆவணங்களை வழங்கி மோசடியாக சொத்துக்களை பதிவு செய்துள்ளனர். இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில பத்திரப்பதிவை ரத்து செய்ய மனு அளித்தேன்.

Advertisment

சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அரசியல் பலம் மற்றும் பண பலம் படைத்தவர்களாக இருந்ததால் பயத்தின் காரணமாக இதுவரை புகார் அளிக்காமல் தற்சமயம் புகார் அளிக்கிறேன். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும் எனது குடும்பத்தாரையும் ஏமாற்றி சுமார் 100 கோடி மதிப்புள்ள சொத்தை மோசடியாக அபகரிப்பு செய்துகொண்டவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும்” எனக் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கரூர் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பான விசாரனையை வரும் 19 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது. இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார். இது தற்போது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.