Skip to main content

இந்து அமைப்புகள் சார்பில் புகார்... காட்மேன் வெப் சீரியஸ் நிறுத்தி வைப்பு!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020
Complaint on behalf of Hindu organizations - Godman Web Serious



தனியார் தொலைக்காட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘காட் மேன்’ வெப் சீரியஸில் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளது. ஆகவே சீரியஸை வெளியிடப்படக்கூடாது என பிராமணர் சமூகம் போராட்டத்தில் இறங்கியது.


இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் அதன் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் சில நிர்வாகிகள் நேரில் வந்து போலீஸ் எஸ்.பி.யிடம் மனு கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது,

"தமிழில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள காட் மேன் என்கிற வெப் சீரியஸ் வருகிற 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியானது அதில் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலான சில காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த டீஸரிலேயே இவ்வாறு இருக்கிறதென்றால் அந்த முழு படமும் எவ்வாறு இருக்கும் என்று எங்களுக்கு  தெரியவில்லை. அந்த காட்சிகளும், வசனங்களும் எங்களையெல்லாம் மிகவும் புண்படுத்தி உள்ளது. எல்லாமே நகைச்சுவை, புதுமை என்ற பெயரில் திரைப்படங்கள் மட்டுமல்ல சீரியஸிலும்கூட  இவ்வாறு செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த  சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்.

 

 


இது வெப் சீரிஸ் என்பதால் இதற்கு அரசின் சென்சார் போர்டு கட்டுப்பாடுகள் இருக்காது. ஆகவே எங்கள் சமூகத்தினருக்கு அந்த முழு வெப் சீரியஸையும் திரையிட்டு எங்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே அதை வெளியிட வேண்டும். அதுவரை அந்த காட் மேன் வெப் சீரியஸை வெளியிட தடை விதிக்க வேண்டும். காவல்துறைதான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர்கள் கூறினார்கள்.

இதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் இந்து அமைப்புகளின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காட் மேன்  சீரியஸை தற்போதைக்கு வெளியிட திட்டம் இல்லை என அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.