தமிழக பா.ஜ.க.வின் ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளராக இருப்பவர் சூரிய சிவா. இவர் சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரையும், அவரது தம்பியையும் குறித்தும் சர்ச்சைக்குள்ளான வகையில் பேசியுள்ளார்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண், மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் சூரிய சிவா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில், ஏற்கனவே தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுநருக்கு முறையான சம்பளம் வழங்காமல் அதை கேட்க சென்றவரை கொலை முயற்சி செய்ததாக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருந்தும் தற்போது மீண்டும் இப்படி சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டு இருக்கிறார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிவா மத கலவரத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேச்சாலும் செயல்பாடுகளாலும் மற்றவர்களை தூண்டி விடுவதுபோல் செயல்பட்டுவருகிறார். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.