கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டசம்பவமாகும். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. 72 வயதான எஸ்.ஏ.பாஷா நீண்ட நாட்களாவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பிணையில் வெளியே வந்திருந்த எஸ்.ஏ.பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 16/12/2024அன்று அவருடைய இல்லத்தில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் பாஷாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பில் சிறைவாசம் குறித்து பாஷா தனுடன் பகிர்ந்து கொண்டதாக பல்வேறு சம்பவங்களையும் வெளிப்படுத்தி பேசி இருந்தார். இந்நிலையில் கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு ஆதரவாக சீமான் செயல்படுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அகில பாரத் இந்து மகா சபாசார்பில் கொடுக்கப்பட்ட அந்த புகாரில் 'குண்டுவெடிப்பு சம்பவத்தின் முதல் குற்றவாளி பாஷாவுக்கு சீமான் அறிக்கையில் ஆதரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் சீமான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.