பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோட்டூர் மன்னார்குடி உள்ளிட்ட பல இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
நடப்பு ஆண்டில் தொடர்ந்து பெய்த வரலாறு காணாத மழையால், தமிழகம் முழுவதிலும் விவசாயம் பாழாகியிருக்கிறது, டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையிலும், கதிர்வரும் தருணத்திலும், இருந்த பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடந்தபடியே இருக்கிறது. அந்தவகையில் திருவாருர் மாவட்டம் முமுவதும் 100 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் அறிவித்து, முதற்கட்டமாக கோட்டூர், தட்டான்கோவில், கீழப்பாலம், சவளக்காரன் உள்ளிட்ட இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
‘பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேணடும். விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்கள் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அழுகிய பயிரை கையில் வைத்துக்கொண்டு சாலையில் சமையல் செய்த விவசாயிகள், தமிழக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.