தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் மையமாக இருப்பதோடு வளர்ந்து வரும் பெருநகரமான விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டக் குழு சார்பில் இன்று விழுப்புரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் நாகபட்டினம் எம்.பி. எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செய்வதோடு சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் பாதாள சாக்கடை குழிகளை உடனடியாக மூட வேண்டும், குழிகளை நிரப்ப போடப்படும் மூடிகள் சாலைகளுக்கு சமமாக அமைக்க வேண்டும், அதேபோல் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்து அதில் ஏழை எளிய மக்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டும், நகரின் அனைத்து வார்டுகளிலும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
"இந்திய நாட்டில் கிராமம் முதல் நகரம் வரை வாழும் மக்களுக்கு குடிக்க நல்ல தண்ணீர், குடியிருக்க வீடு, சுகாதாரம், மருத்துவம், இலவச கல்வி கொடுக்க முடியாத மத்திய பாஜக மோடி அரசும், அதன் பினாமியாக ஆட்சி புரியும் மாநில அ.தி.மு.க.எடப்பாடி அரசும் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியவில்லை. பெரு முதலாளிகளுக்கு கார்பரேட் கம்பெனிகளுக்கு நாட்டை கூறுபோட்டு விற்கிறார்கள். இங்கு வாழும் ஏழை விவசாயின் கழுத்தில் கடன், வறுமை என்ற சுருக்கு கயிறை போட்டு இறக்கிறார்கள். மக்களை மதத்தால் பிரிவினை ஏற்படுத்தி வன்முறைக்கு வழிவகை செய்கிறார்கள். மத்தியில் மோடி அரசும், மாநில எடப்பாடி அரசும் அப்புறப்படுத்துவது தான் மக்கள் நலனுக்கான ஒரே தீர்வு" என்றார் நாகை எம்.பி. செல்வராஜ்.