Communist Party of India (Marxist) State Secretary K. Balakrishnan tweets

கடந்த செப். 6- ஆம் தேதி பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சனாதன வெறியில் வன்முறைக்கு வித்திடுகிறது பா.ஜ.க.

தி.மு.க. எம்.பி., ஆ.ராசா பேசிய ஒரு மேடைப் பேச்சின் சிறு பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, வன்முறையை தூண்டும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

Advertisment

மனு அநீதி சாஸ்திரத்திலும், சனாதன நூல்களிலும் காலம் காலமாக இடம்பெற்றுள்ள அநாகரீகமான கருத்துக்கள் குறித்து எந்த கோபமும் கொள்ளாதவர்கள், அதை எடுத்துக்காட்டி விமர்சித்த ஆ.ராசா மீது பாய்கிறார்கள். தாக்குதலைத் தூண்டிவிடுகிற பகிரங்க முயற்சிகளைச் செய்கிறார்கள்.

எத்தனையோ அறிஞர்களால் எடுத்துக்காட்டப்பட்டு, சாடப்பட்ட இந்திய அரசமைப்புக்கு விரோதமான அந்த கருத்துக்களை சுட்டிக்காட்டி பலரும் கண்டித்துள்ளார்கள். ஆனால் அதையே ஆ.ராசா எடுத்துச் சொன்னால் மட்டும் எதிர்ப்பு எழுவது ஏன்? சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் எழும் அதே சனாதன வெறிதானே?

இந்த சிந்தனைதான் ஆபத்தானது, அநாகரீகமானது. பா.ஜ.க. முன்னெடுக்கும் இத்தகைய அரசியல் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.