Skip to main content

102 வயதுவரை வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் சி.எஸ்.சுப்பிரமணியம் வழங்கிய நிலத்தில் 'தத்துவப் பள்ளி'

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

communist c.s. subramaniyam

 

கம்யூனிச கொள்கைகளை விதைத்து அதை இயக்கமாக உருவாக்கி, அதிலும் நமது தமிழ் மண்ணில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையை ஏற்படுத்தி அதன் நிர்வாகியாகச் செயல்பட்ட சி.எஸ்.சுப்பிரமணியம், தனது சொந்த நிலத்தை தன் மரணத்திற்குப் பிறகு 'தத்துவப் பள்ளி' அமைக்க உயில் எழுதியிருந்தார். இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கட்சிக்கு தானமாக வழங்கிய 31 சென்ட் நிலத்தில், இன்று (18.09.2020) கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தத்துவார்த்த பயிற்சிப் பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

 

சி.எஸ்.சுப்பிரமணியம் பற்றிய சிறு அறிமுகம், தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கோமல் என்ற கிராமம்தான், சி.எஸ்.சுப்பிரமணியத்தின் பூர்வீகம். இவர்களின் குடும்பம் செல்வ செழிப்பானது. இவரது அப்பா சுந்தரம் அய்யர், அப்போதே மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர். பிறகு அவர் சென்னை சைதாபேட்டையில் இயங்கிவந்த கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1910 ஜுன் 16 இல் சுந்தரம் அய்யருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் சி.எஸ்.சுப்பிரமணியம், சென்னை மாநில கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சர்வதேச அளவில் உயர் கல்வியான ஐ.சி.எஸ் படிக்க லண்டனுக்கு தனது மகன் சி.எஸ்.சுப்பிரமணியத்தை அனுப்பி வைத்தார் அவரது அப்பா. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் முதுநிலை கலை பட்டம் பெற்ற சி.எஸ்.சுப்பிரமணியம், மார்க்சீய நூல்கலை அதிகம் படித்தார். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டது. பிறகு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'டெய்லி வொர்க்கர்'-இல் பணியாற்றியதோடு ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றார். 

 

லன்டனில் உள்ள இந்திய மாணவர்களை ஒருங்கிணைத்து, இந்திய மாணவர் அமைப்பை ஏற்படுத்தினார். இந்தியாவில், இப்போது முதல் தேவை, நாடு சுதந்திரம் பெற வேண்டும். அடுத்து, கம்யூனிச அமைப்பின் அதிகாரம் நிறுவ வேண்டும் என உறுதி பூண்டு அந்த நோக்கத்தில் பயணித்தார். அப்போதுதான், லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மகாத்மா காந்தி சென்றிருக்கிறார். சி.எஸ்.சுப்பிரமணியம் காந்தியடிகளைச் சந்தித்துப் பேசினார். பிறகு, சி.எஸ்.சுப்பிரமணியம் ஒருங்கிணைத்த, லண்டனில் உள்ள இந்திய மாணவர்கள் கூட்டத்தில் காந்தியடிகள் பேசியதும் குறிப்பிடத்தக்கது.


ஐ.சி.எஸ் படிக்க போன மகன் பட்டத்துடன் திரும்புவான் என அவரது பெற்றோர் எதிர்பார்க்க ஐ.சி.எஸ் பட்டமில்லாமல் சென்னை திரும்பிய சி.எஸ்.சுப்பிரமணியம் "நான் மிகப் பெரிய பட்டம் பெற்றுள்ளேன் ஆம் நான் ஒரு கம்யூனிஸ்ட்" என அவர்கள் குடும்பத்தை வியக்க வைத்துள்ளார்.

 

Ad


இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் மூலவர்களான பாஷ்யம், அமீர்ஹைதர்கான், சிங்காரவேலர் என பல தலைவர்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. மேலும், முதல் முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை, சென்னையில் தொடங்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார் சுப்பிரமணியம். ஆங்கிலேய ஆட்சியாளர்களால் போடப்பட்ட சதி வழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சி.எஸ்.சுப்பிரமணியம் இரு வருடம் சிறையில் இருந்தார். சுதந்திரப் போராட்டம், கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் அமைப்பு, கட்சி பத்திரிகையில் பணி புரிந்தது என முழுமையான செயற்பாட்டாளராக இருந்த அவர் எந்த இடத்திலும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் இருந்துள்ளார். 


இந்திய அளவில் ஏராளமான தலைவர்களோடு தொடர்பில் இருந்தும் அவர் எந்தப் பதிவையும் வெளியிட்டதில்லை. அவருடைய குடும்ப வாழ்வைப் பற்றியும் முழுமையான தகவல் இல்லை. நீண்ட காலம் அவரைப் பற்றிய செய்தி இல்லாமலேயே இருந்தது. இந்தச் சூழலில்தான், ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக நா.பெரியசாமி பொறுப்பு வகித்தார். அப்போது, அவர் சி.எஸ்.சுப்பிரமணியத்தை நேரில் சென்று சந்தித்து, அவர் கோபிசெட்டிபாளையத்தில் இருப்பதை உறுதிசெய்து கட்சித் தலைமைக்கு தகவல் கூறினார். அதன் பிறகுதான், சி.எஸ்.சுப்பிரமணியம் கோபிசெட்டிபாளையத்தில் இருப்பதை தலைமை உறுதிப்படுத்தியது.

 

அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த ப.மாணிக்கம் உள்ளிட்ட தலைவர்கள் சி.எஸ்.சுப்பிரமணியத்தோடு, நா.பெரியசாமியை தொடர்பில் இருக்க அறிவுறுத்தி இருந்தனர். சி.எஸ்.சுப்பிரமணியத்தின் மனைவி ஒரு மருத்துவர். கோபிசெட்டிபாளைய மக்களுக்காக ஒரு மருத்துவமனையை உருவாக்கி மருத்துவச் சேவையைச் செய்து வந்தார். இந்நிலையில், சி.எஸ்.சுப்பிரமணியத்தின் மனைவி இறந்துவிட, அதே வீட்டில் சி. எஸ்.சுப்பிரமணியம் மட்டும் வசித்து வந்தார். இந்தச் சமயத்தில்தான் முன்னாள் எம்.எல்.ஏ.வான நா.பெரியசாமி தமிழக கட்சித் தலைமைக்கு அவரைப் பற்றிய தகவலைக் கூறினார். 

 

இதன் தொடர்ச்சியாகவே, 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வசித்த தகவல் தெரிந்து, மாவட்டச் செயலாளர் நா.பெரியசாமி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, டி.ராஜா, தா.பான்டியன், சி.மகேந்திரன் போன்றோர் நேரில் சென்று அவரைச் சந்தித்தனர். உங்களைப் பற்றி சொல்லுங்கள் அது இந்திய தேசத்தின் வரலாறு என பல தலைவர்கள் அவரிடம் கேட்டும் என்னைப் பற்றி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. நான் ஒரு கம்யூனிஸ்டாக வேலை செய்தேன், நீங்களும் கம்யூனிஸ்ட்டாக பணி செய்யுங்கள். என்றே கூறியிருக்கிறார். சில முயற்சிக்குப் பிறகு மூத்த தலைவர் ஆர்.என்.கே ஏற்பாட்டில் சி.எஸ்.சுப்பிரமணியம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டு அம்பத்தூர் என்.சி.பி.ஹெச் காலனியில் வாழ்ந்தார். 2011 இல் தனது 102 ஆவது வயதில் மறைந்தார்.

 

Nakkheeran


நீண்ட தேடலுக்குப் பிறகு 2001 -இல் சி.எஸ்.சுப்பிரமணியத்தை கோபிசெட்டிபாளையம் வீட்டில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்தபோது அவர், "நான் உயிருள்ளவரை கம்யூனிஸ்ட்தான். எனக்குப் பிறகு, நான் இருக்கும் இந்த இடம் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான். இதை முன்பே உயில் எழுதி வைத்துவிட்டேன். இந்த இடத்தில் கட்சியின் தத்துவார்த்த கல்வி படிப்பகம் நடத்துங்கள்" எனக் கூறியிருக்கிறார். அப்படி சி.எஸ்.சுப்பிரமணியம் வழங்கிய 31 சென்ட் நிலத்தில்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த கல்விக் கட்டிடம், 'சி.எஸ்.நினைவரங்கம்' என்ற பெயரில், ரூபாய் 5 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பான்டியன் தலைமையில் முத்தரசன், சுப்பராயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உயிர்க்கொல்லி நோய் வந்த போது எங்களிடம் தான் உதவி கேட்டனர்” - சென்னையில் சேகுவேரா மகள் பெருமிதம்

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

- நர்மதா தேவி, சி.பி.ஐ(எம்)

 

che guevara daughter Aleida Guevara spoke in Chennai

 

எர்னெஸ்டோ சே குவேரா. வெறும் முப்பத்தி ஒன்பதே ஆண்டுக் காலம் வாழ்ந்து மறைந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர். அவர் வீர மரணமடைந்து 56 ஆண்டுகள் கரைந்துவிட்டன. ஆனால், இன்றளவிலும் உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாகத் திகழ்கிறார்.

 

தென் அமெரிக்க மக்கள் வட அமெரிக்காவின் ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டலால் விலங்குகளை விட மோசமான நிலையில் வாழ்கிறார்கள் என்பதை தனது நெடிய பயணங்கள் வழி உணர்ந்தவர் சே. அர்ஜென்டினாவில் பிறந்து மருத்துவம் பயின்றுவிட்டு ஃபிடல் காஸ்ட்ரோவோடு இணைந்து கியூபப் புரட்சியை வெற்றிபெற வைத்தார். 

 

1959 ஆம் ஆண்டில் புதிதாய் மலர்ந்த சோஷலிச கியூபாவின் மத்திய வங்கித் தலைவர், தொழிற்சாலைகள் அமைச்சர் எனப் பல பொறுப்புகள் அவருக்கு இருந்தன. அவர் நினைத்திருந்தால் கியூபாவின் அமைச்சராக; கியூபாவின் முக்கியத் தலைவராக நிறைவோடு வாழ்ந்திருக்க முடியும். ஆனால், சே-வால் தன்னை ஒரு நாட்டின் குடிமகனாக மட்டும் சுருக்கிக்கொள்ள முடியவில்லை. உலகில் சுரண்டப்படும் அனைத்து நாட்டு பாட்டாளி வர்க்கமும் விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டவராக; ஓர் உண்மையான சர்வதேசவாதியாக அவர் இருந்தார். 

 

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அங்கெல்லாமும் புரட்சி செய்ய வேண்டும், அதற்கு தான் உதவ வேண்டும் என நினைத்தார். 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் தான் வகித்து வந்த எல்லா அரசுப் பொறுப்புகளையும் துறந்துவிட்டு, தனது குடும்பத்தையும் துறந்துவிட்டு, காங்கோ சென்றார். அங்கு அவர் மேற்கொண்ட புரட்சிகர நடவடிக்கைகள் தோல்வி காணவே, பொலிவியாவில் புரட்சிகர நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அங்கு சென்றார்.

 

கியூபா விஷயத்தில்தான் கோட்டைவிட்டோம்; இனியும் சும்மா இருப்போமா என மும்முரமாக இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. அக்டோபர் 8, 1967 அன்று அவரை கைது செய்து, எந்தவிதமான விசாரணையும் இன்றி, அவரை மறுநாளே படுகொலை செய்தது. 1965ல் சே கியூபாவை விட்டுச் சென்றபோது அவரது நான்கு பிள்ளைகளில் மூத்த பெண் குழந்தை அலெய்டாவுக்கு நான்கரை வயது. இப்போது அலெய்டா ஒரு குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றுகிறார். கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்கிறார். உலக மக்கள் எல்லோருக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் எனப் போராடி வருகிறார்.

 

ஒரு மாத காலப் பயணமாக இந்தியாவிற்கு வந்திருப்பவர், ஜனவரி 17,18 ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகை தந்திருந்தார். அவரோடு அவருடைய மகள் எஸ்டெஃபானி மச்சின் குவேராவும் வந்திருந்தார். அவர் ஹவானா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யூ, அகில இந்திய கியூப ஒருமைப்பாட்டுக்குழு இவர்களுடைய பயணத்தை ஏற்பாடு செய்திருக்கின்றன.

 

17 ஜனவரி அன்று சென்னை விமான நிலையத்தில் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மிகப்பிரம்மாண்டமான ஒரு வரவேற்பை வழங்கினார்கள். அன்றைக்கு மாலை தி.நகர் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் வர்க்க வெகுஜன அரங்கப் பிரதிநிதிகள் பங்குபெற்ற சிறு உரையாடல் நிகழ்வில் டாக்டர் அலெய்டாவும், எஸ்டெஃபானியும் உரையாற்றினார்கள். ஏகாதிபத்திய அமெரிக்காவின் மனிதநேயமற்ற, சட்டத்துக்குப் புறம்பான பொருளாதாரத் தடைகளால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கியூபா சந்தித்து வரும் நெருக்கடிகளைப் பற்றியும் சவால்களைப் பற்றியும் டாக்டர் அலெய்டா விவரித்தார்.  

 

மேலும் அவர் பேசும் போது, “அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் கியூபா தனித்திருக்கிறது. எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்ய முடியாத சூழலில் நிறைய பொருட்களையும் சேவைகளையும் எங்களால் மக்களுக்கு உறுதி செய்ய முடியவில்லை. அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் வட அமெரிக்காவில் எல்லாம் கிடைக்கிறது. கியூபாவில்தான் எதுவும் கிடைக்கவில்லை என விஷப்பிரச்சாரம் செய்கின்றன. அதைப் பார்க்கும் இளைஞர்கள் எங்களுக்குப் பல விஷயங்கள் இல்லை என நினைக்கிறார்கள். எல்லா இளைஞர்களுக்கும் கல்வி, மருத்துவ சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும், இன்றைய தலைமுறையினருக்கு வேறு சில தேவைகளும் இருக்கின்றன. அவர்களுக்கு ஏகாதிபத்திய அமெரிக்காவின் கொடூரச் செயல்களைப் பற்றிய புரிதலை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.

 

ஆப்பிரிக்காவில் எபோலா உயிர்க்கொல்லி நோய் வந்தபோது, உலக சுகாதார அமைப்பு வட அமெரிக்காவிடம் மருத்துவர்களை அனுப்புங்கள் எனக் கேட்கவில்லை; இங்கிலாந்திடமோ, சுவிட்சர்லாந்திடமோ உதவி கேட்கவில்லை; நம்மிடம், கியூபாவிடம்தான் உதவி கேட்டது. ஏனெனில், உலகில் எங்கு மனிதர்களுக்குத் துன்பம் என்றாலும், நாம் மனிதநேயத்துடன் மனித சமூகத்துக்காக நிற்பவர்கள் என கியூபாவின் மதிப்பீடுகளைப் பற்றி கொள்கைகளைப் பற்றி புரியவைக்கிறோம். இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது” என்றார்.

 


 

Next Story

"கம்யூனிசமோ சோசலிசமோ தேவையில்லை.. ராமராஜ்ஜியத்தையே நாடு விரும்புகிறது" - யோகி ஆதித்யநாத்!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

yogi adityanath

 

உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் கடைசி அமர்வில், நேற்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நேற்று இரண்டாவது துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், நாட்டிற்கு ராம ராஜ்யமே தேவை என கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; சோசலிசம் என்பது மிகப்பெரிய மூடநம்பிக்கை. இது குடும்ப சோசலிசம், மாஃபியா சோசலிசம், அராஜகவாத சோசலிசம், கலக சோசலிசம் மற்றும் பயங்கரவாத சோசலிசம் போன்ற பல போலி முத்திரைகளைக் கொண்டுள்ளது. சோசலிசம் என்பது ஒரு ரெட் அலர்ட் என்று மாநில மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர். சோசலிசதிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

 

இந்த நாட்டிற்கு கம்யூனிசமோ சோசலிசமோ தேவையில்லை என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இந்த நாடு ராமராஜ்ஜியத்தை மட்டுமே விரும்புகிறது. உத்தரபிரதேசத்திற்கு ராமராஜ்ஜியத்தை மட்டுமே விரும்புகிறது. ராமராஜ்யம் என்பது நிலைத்திருப்பது, உலகளாவியது. எந்த சூழ்நிலையாலும் பாதிக்கப்படாதது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.