
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வேதி பொறியியல் துறையின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாட்டில் துறையின் 75 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதல்வர் சி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வேதிப் பொறியியல் துறை தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், இந்த பல்கலைக்கழகம் இப்போது இருக்கும் நிலைக்கு எவ்வாறு தன்னை வடிவமைத்தது என்ற பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
மேலும் சமூகத்தின் பின்தங்கிய வகுப்பினருக்கு கல்வியை வழங்குவதில் பல்கலைக்கழகத்தில் பங்கு பாராட்டதக்கது. பல்வேறு துறைகளில் திறம்பட்டவர்களை உருவாக்குவதற்காக ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவிய தொலைநோக்கு நிறுவனர் ஆற்றிய பங்கையும் எடுத்துரைத்தார்.சுதந்திரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட அனைத்து மாநில பல்கலைக்கழகங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஒரு இந்தியரால் தமிழரால் நிறுவப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் மற்றவை அனைத்தும் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் சுய நிலைப்பு தன்மைக்கு வழிவகுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் கல்விக் கூடத்திற்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பு உள்ளது என்றார்.
சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ பேராசிரியர் ஜிடி யாதவ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் வேதி பொறியியல் பல்துறை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களுமான பைரவன், நரசிம்மன், அருள்தாஸ், கந்தையா, கனரக நீர் வாரியம் சிறந்த விஞ்ஞானி இளநகை, சென்னை கெல்லாக் பிரவுன் நிறுவனத்தின் திட்ட விநியோக தலைவர் பத்மா ஆகியோர் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். விழா மலரை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் வெளியிட அனைவரும் பெற்றுக்கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பாக வேதி பொறியியல் துறை ஆய்வகங்களுக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ 1 லட்சத்து 14 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.விழாவில் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து பல நுண்ணறிவு குழு விவாதங்கள் மற்றும் தொழில்நுட்ப அமர்வுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை மாணவர்கள் பெற்றனர். இதில் தற்போதைய வேதிதுறையின்போக்குகள் கண்டுபிடிப்புகள் மற்றும் வேதி பொறியியல் எதிர்கால சவால்கள் பற்றி பேசப்பட்டது. முன்னதாக பல்கலைக்கழகத்தில் அப்போது பயின்று மறைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.