Skip to main content

“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

The comedian who lost his real hero; The whole family in deep grief

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ராராபுரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த தம்பி ராமையா, சினிமாத்துறையில் பிரபலமடைந்து சாதித்துவருகிறார். சினிமாவில் சாதிக்கத் தொடங்கினாலும் பிறந்த மண்ணையும், உடன் பிறந்தோர், உறவுகளையும் நேசிப்பவர். அவரது உடன்பிறந்த தம்பி உமாபதி, இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு திருமணமான 10 வருடங்களுக்குப் பிறகு இரட்டை ஆண் குழந்தைகள் அகிலன், முகிலன் பிறந்தனர். உமாபதி ரியாத்தில் வாட்டர் ஹீட்டர் ப்ராஜெக்டில் 2014ஆம் ஆண்டு 'மிஸ்டர் ப்ரைன்' அவார்டு வாங்கியுள்ளார்.

 

சில மாதங்களுக்கு முன்பு ராஜகுமாரியின் தந்தை உடல்நக்குறைவால் உயிரிழந்ததால் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு வந்தனர். தந்தை இறந்த 15 நாட்களில் மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்த தம்பியும் கரோனாவுக்குப் பலியான நிலையில், அடுத்து அவரது தாயாரும் உயிரிழந்தார். இப்படி தன் குடும்பத்தில் ஒவ்வொரு உயிராக பறிபோவதை நினைத்து மனமுடைந்திருந்த ராஜகுமாரிக்கு, 25 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று கண்டறியப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் கூட சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

The comedian who lost his real hero; The whole family in deep grief

 

இப்படி அடுத்தடுத்து நடக்கும் துயரங்களைத் தாங்கமுடியாமல் கதறிக்கொண்டிருக்கிறார்கள் தம்பி ராமையாவின் குடும்பத்தினர். தம்பி ராமையா இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் ஆர்வம் உள்ளவர். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விவேக் உயிரிழந்தபோது, அவரது நினைவாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் இளைஞர்கள் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனால் உலகமெங்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர். கொத்தமங்கலம் இளைஞர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு 'நம் புதுக்கோட்டை மண் எப்பவும் முன்னோடியான மண் என்பதைக் காட்டிவிட்டீர்கள்' என்று பாராட்டினார். 

 

இந்த நிலையில்தான், தம்பி ராமையாவின் தம்பி மனைவி ராஜகுமாரி கரோனா தொற்று ஏற்பட்டு இறந்த தகவல் அறிந்த கொத்தமங்கலம் பசுமைப் புரட்சி ரமேஷ் என்ற இளைஞர், அய்யனார் கோயில் வளாகத்தில் ராஜகுமாரி பெயரில் மரக்கன்று நட்டு இன்று மண்ணுக்குள் விதையாக விழுந்த ராஜகுமாரி, விருட்சமாக எழுந்து நிற்பார் என்றார். சோகத்தில் இருக்கும் நடிகர் தம்பி ராமையைா, “என் உடன் பிறந்த தம்பி உமாபதிதான் என் வாழ்க்கையின் நிஜ ஹீரோ. தம்பி மீதான பாசத்தால்தான் என் மகனுக்கு உமாபதி என்று பெயர் வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையில் மிகப் பெரிய கொடூரமான நாட்கள். அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம். 

 

கடைசியில் ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு. இந்தக் கரோனா என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்ந்துவிட்டேன். என் அன்பு உறவுகளே, அரசாங்க வழிகாட்டு முறைகளைக் கடைப்பிடியுங்கள், உயிரிழப்புகளைத் தவிருங்கள். வலியும், வேதனையும் உணர்ந்து சொல்கிறேன்” என்றார். எத்தனை சோகத்தில் இருப்பவர்களையும் தனது அசாத்திய பேச்சால், நடிப்பால், உடல்மொழியால் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த தம்பி ராமையாவின் குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறது. எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று கடைசிவரை போராடியும் காப்பாற்ற முடியவில்லையே என்ற அழுத்தம் அவர்களிடம் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.