Skip to main content

காதலியைச் சந்திக்கச் சென்ற கல்லூரி மாணவன்; அவமானத்தால் தூக்கில் தொங்கிய துயரம்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

A college student who went to meet his girlfriend  passed away

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்  முருகானந்தம். இவருடைய மனைவியின் பெயர் தேவி. இந்தத் தம்பதியின் 18 வயது மகன் ஜீவசூர்யா. மதுரையில் உள்ள அல்ட்ரா கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். ஜீவசூர்யா பள்ளியில் படிக்கும் போது கழுகேர்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பள்ளிப்பருவக் காதல் கல்லூரியிலும் தொடர்ந்துள்ளது. தன் காதலியான ஆசிகாவை கழுகேர்கடை பகுதியில் வைத்து சந்திப்பதை ஜீவசூர்யா வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால்  கழுகேர்கடை பகுதிக்கு சென்று ஆசிகாவை சந்தித்துப் பேசியுள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆசிகாவின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து, தன் மகள் ஒரு பையனுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஜீவசூர்யாவைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல், ஜீவசூர்யாவின் டூவீலர் மற்றும் செல்போன் ஆகியவற்றைப்  பிடுங்கிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து,  ஜீவசூர்யாவை அன்றிரவு காரில் கூட்டி வந்து, திருப்புவனத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. தன்னைப் பொதுஇடத்தில் பலபேர் முன்னிலையில் கட்டிவைத்து தாக்கியதால் ஜீவசூர்யாவுக்கு மிகுந்த மனஅழுத்தம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், அவமானம் தாங்க முடியாத ஜீவசூர்யா தனது வீட்டின் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிதுநேரம் கழித்து ஜீவசூர்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். தன் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்கேயே கண்ணீர்விட்டுக் கதறினர்.

 

அதன் பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஜீவசூர்யாவின் உடலை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜீவசூர்யாவின் தாயார் தேவி கொடுத்த புகாரின் பேரில், ஜீவசூர்யாவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, திருப்புவனம் மருத்துவமனை வளாகத்தில் ஜீவசூர்யாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து, ஜீவசூர்யாவின் உறவினர் சுரேஷ் என்பவர் பேசும்போது, “ஜீவசூர்யாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை” எனத் தெரிவித்தார். இதையடுத்து, ஜீவசூர்யாவின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானம் செய்தனர். காதலியைச் சந்திக்க சென்ற கல்லூரி மாணவனை அடித்து அவமானப்படுத்தியதால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.