ADVERTISEMENT

முத்தத்தினால் முதல்வர் படத்தை வரைந்த கல்லூரி மாணவன்!

04:36 PM Jul 17, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் 20 வயது நிரம்பிய நரசிம்மன். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் ஆர்கிடெக்சர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும் கல்லூரி மாணவர் ஆவார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார். இவர் பள்ளி படிக்கும் காலத்தில் வெள்ளை தாள் கொண்ட நோட்டுக்களில் இயற்கை காட்சிகள், பூக்கள், மனித உருவங்கள், மிருகங்கள், பறவைகள் என இப்படி பல்வேறு விதமான ஓவியங்களை வரைந்து வந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த ஆர்வத்தினால் தான் அது சம்பந்தமான படிப்பில் சேர்ந்து தற்போது படித்து வருகிறார். இந்த நிலையில் வாலிகண்டபுரம் ஊரின் அருகிலுள்ள வாலீஸ்வரர் கோவில் முன்பு உள்ள பகுதியில் 16 அடி உயரமும் 8.5.அடி அகலமும் கொண்ட வெள்ளை துணியினால் கட்டப்பட்ட திறையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவத்தை வரைந்துள்ளார். அதுவும் எப்படி தெரியுமா? ஒரு பாத்திரத்தில் பெயிண்டை நிரப்பி வைத்து விட்டு தன் உதடுகளால் பாத்திரத்தில் இருந்த பெயிண்டை தன் உதடுகளால் தொட்டு..... தொட்டு.... திரையில் முத்தமிட்டு ஒத்தி எடுத்து ஸ்டாலின் படத்தை உருவாக்கியுள்ளார். ஸ்டாலின் படத்தை வரைவதற்கு இவர் தனது உதடுகளால் 3000 முறை திரையில் முத்தமிட்டு படத்தை வரைந்து முடித்துள்ளார்.

இதற்கு இவர் கெமிக்கல் அதிகம் கலக்காத பிக் அப் பெயிண்ட் என்ற பெயின்ட் வகையை பயன்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளார் நரசிம்மன். இவர் இதற்கு முன்பு தஞ்சை பெரிய கோயில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஓவியங்களை தனது மூக்கினால் தொட்டு வண்ணத்தில் வரைந்துள்ளார். இவரது திறமையை பாராட்டி பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் பரிசு வழங்கி பாராட்டி உள்ளார். நரசிம்மன் வரைந்த ஓவியத்தை பார்த்து பலதரப்பட்ட மக்களும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT