சாலையோரம் கிடந்த குழந்தையைக் கைப்பற்றிய போலீசார் விசாரித்ததில் அந்தக் குழந்தை திருச்சி கல்லூரி மாணவிக்குப் பிறந்தது என உறுதியானது. இந்த நிலையில் விஷம் குடித்ததாகக் கூறப்பட்ட கல்லூரி மாணவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாக மரண வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம் ஜீயபுரம், முக்கொம்பு அருகே ராமவாத்தலை வாய்க்கால் கரையில் கடந்த 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, அங்கு பிறந்து சில நாள்களே ( 2 அல்லது 3 நாள்கள்) ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த போலீசார் குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 19 வயதான கல்லூரி மாணவி திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரும் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தெடார்பாக போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், ஆற்றங்கரையில் கிடந்தது கல்லூரி மாணவி கலைவாணியின் குழந்தை எனத் தெரிய வந்தது. மாணவிக்குத் திருமணத்திற்கு முன்பே இக்குழந்தை பிறந்துள்ளதாகவும், வெளியே தெரியாமல் மறைக்க குழந்தையை ஆற்றங்கரையில் வீசியதும் தெரிய வந்துள்ளது. ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
முன்னதாக மாஜிஸ்திரேட்டிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை விஷம் ஊற்றிக் கொல்ல முயன்றனர் என அவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாணவி 2 பேர் மீது குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்பு மேலும் பல உண்மைச் சம்பவங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.