
ஈரோடு மாவட்டம் நெரிஞ்ப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லக்கேஸ்வரி. இவர்களது மகன் கிரி(20) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மின்வாரிய ஊழியரான நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் பலியானார். இதனைத் தொடர்ந்து லக்கேஸ்வரிதான் குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கிரி தனக்கு இருசக்கர வாகனம் வேண்டும் என்று தாய் லக்கேஸ்வரியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், வீட்டில் ஏற்கனவே கடன் இருக்கிறது. அதனை முடித்து பின்பு இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாக மகன் கிரியிடம் கூறியுள்ளார். இதனால் மகன் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம்(20.11.2024) மதியம் பரோட்டா சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று தாய் லக்கேஸ்வரியிடம் தனக்குப் பரோட்டா வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு லக்கேஸ்வரி, இந்த நேரத்தில் பரோட்டா கிடைக்காது. பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறியிருக்கிறாராம்.
இதற்கு, எனது தந்தை இருந்திருந்தால் எனக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்திருப்பார் என்று புலம்பியபடியே சென்றிருக்கிறார். பின்னர் நாம் கேட்ட பைக்கும் கிடைக்கவில்லை; தற்போது பரோட்டாவும் கிடைக்க வில்லை என்று மன விரக்தியில் இருந்த கிரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனமும், பரோட்டாவும் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.