
கோவையில் உள்ள ஒரு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் 16 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் படித்துவருகிறார். அவருடைய சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி. அதே ஊரைச் சேர்ந்த சர்வேஸ்வரன் (22) கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, கோவையில் கார் டிரைவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில், அவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதனால் அவர் அந்த மாணவியின் செல்ஃபோன் எண்ணில் தொடர்புகொண்டு நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டார். மேலும், அந்த மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாப்பிரெட்டிப்பட்டிக்குக் கடத்தி சென்ற சர்வேஸ்வரன், அங்கு ஒரு வீட்டில் மாணவியைத் தங்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மாணவியைக் காணாமல் தவித்த பெற்றோர், போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், அந்த மாணவியை சர்வேஸ்வரன் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து, சர்வேஸ்வரனை கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்து, மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.