ADVERTISEMENT

கல்லூரியில் மாணவி தற்கொலை! அண்ணனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் பறிமுதல்! 

12:43 PM May 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் செம்மண்டலத்தில், ஒரு அறக்கட்டளையின் கட்டுப்பாட்டிலுள்ள மகளிர் கல்லூரி ஒன்று இயங்கிவருகிறது. இது காலை, மாலை என இரண்டு பகுதிகளாக ஷிப்ட் முறையில் இயங்குகிறது. மாலை நேர வகுப்புகள் சுயநிதி கல்லூரியாக செயல்படுவதால் கட்டணம் செலுத்தி மாணவியர் படிக்கின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள சின்னபாபுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகள் தனலெட்சுமி(19) மாலைநேர வகுப்பில் பணம் செலுத்தி பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.


தனலட்சுமி சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை மாலை அவரது தந்தை நாகலிங்கம் விடுதியில் கொண்டு வந்து விட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை, மாலை நேர வகுப்புக்கு வர வேண்டிய அவர் அதிகாலை ஏழரை மணிக்கே கல்லூரிக்கு வந்துள்ளார். நேராக கல்லூரி பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்று துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி பெண் ஊழியர் ஒருவர் கழிவறைக்கு சென்ற போது தனலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அலறி அடித்தபடி ஓடி வந்து தகவல் தெரிவித்தார். அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் காவல் ஆய்வாளர், குருமூர்த்தி, மகேஸ்வரி மற்றும் போலீசார் கல்லூரியில் விசாரணை நடத்தினர். காவல்துறையினர் தனலட்சுமியின் புத்தக பையை சோதனை செய்ததில் தனது அண்ணனுக்கு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்

தனலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரியில் முதல்வரின் அறைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விடுமுறை முடிந்து விடுதிக்கு வரும் போது தங்களது மகள் நன்றாக இருந்ததாகவும், திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்ப முடியவில்லை, அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனவும் கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதை ஏற்று உறவினர்கள் கலைந்து சென்றனர்.


பின்னர் தனலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT