Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி: வீடு வழங்க உத்தரவிட்ட கலெக்டர்... டாய்லெட் கட்டும் பணி தீவிரம்!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

 Collector who ordered to provide house ... Intensity of toilet construction work!

 

"என் தங்கச்சிக்கு ஒரு டாய்லலெட் கட்டித் தரனும் சார்"  எனும் தலைப்பில், ஒரு குடும்பத்தின் கண்ணீர்க் கதையை செய்தியாக்கி, அதை வீடியோவாக, மார்ச் 8 அன்று வெளியிட்டோம். செய்தி வெளியான மறுநாளே, அந்த குடும்பத்திற்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ளார் சிவகங்கை ஆட்சியர்.

 

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி அருகே உள்ளது திருமன்பட்டி கிராமம். நீல தார்ப்பாய் தெரியும் ஓட்டு வீட்டில் லட்சுமணனும் அவரது தங்கையும் வசித்து வருகின்றனர். மண்சுவர்களால் எழுந்து நிற்கும் வீட்டில், சீமை ஓடு போடப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ஓட்டைகளாக இருந்தது. வீட்டுக்குள் சர்வசாதாரணமாக நடமாடும் பாம்பு, விஷப்பூச்சிகள் என சதா நேரமும் அச்சத்திலேயே வாழவேண்டிய அவலநிலை. லட்சுமணனின் அம்மா காலமாகிவிட்டார். அப்பா இன்னொரு குடித்தனம் போய்விட்டார். லட்சுமணனுடன் பிறந்தது மூன்று சகோதரிகள். நல்லது கேட்டது பார்க்கவேண்டிய பொறுப்பு லட்சுமணனுக்கு வந்தது.

 

படிப்பை நிறுத்திவிட்டு கோயம்புத்தூர் சென்ற லட்சுமணன், பைக் விபத்தில் சிக்கிக்கொண்டு கோமாவுக்கு சென்றுள்ளார். பிறகு, கோமாவில் இருந்து மெதுவாக மீண்டுள்ளார். ஆனாலும் விபத்தின் தாக்கத்தால் அவரின் கால்கள் செயலற்றுப் போய்விட்டது. இடுப்புக்கு கீழே உள்ள உறுப்புகள் முழுதாக முடங்கிப் போயுள்ளது. வீட்டிலேயே முடங்கிப்போனார் லட்சுமணன். சுயமாக எதுவும் செய்யமுடியாத நிலை. லட்சுமணனின் ஒரு சகோதரி கணவர் வீட்டில் இருக்கிறார். இன்னொரு சகோதரி சென்னையில் பணியாற்றி வருகிறார். முடங்கிக் கிடக்கும் லட்சுமணனை கவனித்து வருவது கடைசித் தங்கச்சி. அவரும் படிப்பை நிறுத்திவிட்டு, கூலிவேலை செய்து அண்ணனைக் காப்பாற்றி வருகிறார். அவர் மறைவிடமாக குளிப்பதற்கோ, அவசரமாக ஒதுங்குவதற்கோ, நிம்மதியாக உறங்குவதற்கோ வசதியில்லாமல் அல்லல்பட்டு வந்துள்ளார். 

 

இதுகுறித்த செய்தியை 'நாங்களும் இருக்கிறோம்' அறக்கட்டளையைச் சேர்ந்த நண்பர்கள் தெரியப்படுத்தினர். உடனே விரைந்து செய்தியாக்கினோம். வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, உலகெங்கிலும் உள்ள நக்கீரன் பார்வையாளர்கள் பலர், நம்மைத் தொடர்புகொண்டு, லட்சுமணுக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இந்த வீடியோ பல தரப்பிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. பலரும் மளிகை சாமான் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை லட்சுமணன் குடும்பத்திற்கு செய்யத் தொடங்கினர். இதேநேரம், நம்மைத் தொடர்புகொண்ட வழக்கறிஞரும், திமுகவின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளருமான தமிழன் பிரச்சன்னா, உதவி செய்யக் காத்திருக்கிறேன் என்றார். 

 

அதேநேரம், சிவகங்கை ஆட்சியர் மதுசூதனன் அவர்களின் உடனடி உத்தரவின் கீழ், லட்சுமணனின் வீட்டிற்கே சென்ற மாவட்ட திட்ட அலுவலர்கள், ஆய்வு நடத்தினர். அத்துடன், ஒரு வாரத்திற்குள் வீடு வழங்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். டாய்லெட் கட்டுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

உடனடியாக விரைந்து தீர்வுகண்ட சிவகங்கை ஆட்சியருக்கு நக்கீரனின் நன்றியும் பாராட்டுகளும்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.