Skip to main content

பத்து ஆண்டு கோரிக்கையை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியர்... கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

Collector who fulfilled the ten year request in ten minutes

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நேற்று பள்ளி கல்லூரிகள் திறந்ததையடுத்து அங்குச் சென்று ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் அருகே இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் கையில் செருப்பு அணிந்து சென்ற ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்த்தார் ஆட்சியர். உடனே காரை நிறுத்தச் சொல்லி காரில் இருந்து இறங்கி அந்த மாற்றுத்திறனாளி இடம் விசாரித்தார்.

 

அந்த மாற்றுத்திறனாளி நெர்குணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன்(46) பிறந்து எட்டு மாதத்தில் தமக்கு இளம்பிள்ளை வாத நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் செயல் இழந்து விட்டதாகவும் தற்போது கைகள் மூலம் தையல் வேலையை செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த பதினைந்தாண்டுகளுக்கு முன்பு அரசு எனக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியது. அது பழுதடைந்து உடைந்து சேதம் ஆகிவிட்டது. அதன் பிறகு ஒரு புதிய சைக்கிள் வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக  மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு அலைந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அதே போல் யாரும் தனக்கு உதவி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

 

உடனே மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி நல அலுவலரைத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு ஒரு மூன்று சக்கர சைக்கிளை கொண்டு வருமாறு கூறியுள்ளார். அதன்படி வரவழைக்கப்பட்ட மூன்று சக்கர சைக்கிளை மாற்றுத்திறனாளி முனியப்பனிடம் வழங்கினார் ஆட்சியர் மோகன். தமது 10 ஆண்டுக்கால கோரிக்கையை பத்து நிமிடத்தில் நிறைவேற்றிய ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளி முனியப்ப கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் சிறப்பான நடவடிக்கையைக் கண்டு அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.