Skip to main content

கலெக்டர் கொடுத்த கல்யாணப் பரிசு... கைநிறைய மரக்கன்றுகளை அள்ளிச் சென்ற பெண்!!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

தஞ்சாவூர்  மாவட்டம் பேராவூரணி வட்டம் மேல ஒட்டங்காடு. விவசாயிகள் நிறைந்த கிராமம் விவசாயம் என்பதைவிட விவசாய கூலித் தொழிலாளிகள் நிறைந்த ஊர். அந்த ஊரில் அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து படிப்பிற்கே படாதபாடுபட்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று அந்த பணத்தில் படித்து பட்டம் வாங்கி பெயருக்கு பின்னால் சில எழுத்துகளை போட்டுக் கொண்டதோடு நின்றுவிடாமல் தன் தாய், பாட்டியின் கீற்று பின்னும் உழைப்பில் கிடைத்த வருமானத்திலும் வாரத்தில் இரு நாட்கள் ரயிலேறி சென்னை பட்டணம் போய் முதல் நாள்  பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு அறை எடுத்து தங்கினால் பணம் வேண்டுமே என்று ரயில் நிலையத்திலேயே ஒரு இரவை கழித்துவிட்டு மறுநாளும் வகுப்புக்கு போய் மாலை ரயிலேறி கல்லூரி விடுதிக்கு வந்து கல்லூரி படிப்பையும் தொடர்ந்து நண்பர்களின் உதவியோடு கடும் உழைப்பும் முயற்சியும் பலன் கொடுக்க ஐஏஎஸ் தேர்ச்சியானார் சிவகுரு பிரபாகரன். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் போல ஆக நினைத்தேன். கனவு நிறைவேறியது என்று மகிழ்ந்தார்.

எங்கள் கிராமத்தில் முதல் ஐஏஎஸ் என்று கிராமமே கொண்டாட வழக்கம்போல தென்னங்கீற்று பின்னிக் கொண்டிருந்தார்கள் சிவகுருபிரபாகரனின் தாயும் பாட்டியும். கனவு நிறைவேறியது இனி பயிற்சிக்காக அழைப்பார்கள் அதுவரை இன்ப சுற்றுலா போகலாம் என்று எண்ணாமல் தன் ஊருக்கு வந்து கிராமத்தில் படித்து பட்டம் வாங்கிக் கொண்டு வீட்டில் இருந்த பலருக்கு வகுப்பெடுத்து குரூப் தேர்வுகளை எழுத தூண்டி சிலரை அரசு வேலைக்கு அனுப்பியதுடன் சில மாதங்களை வீட்டிலேயே கழிக்காமல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்டங்களில் உள்ள கிராம அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். நீங்களும் என்னைப் போல ஐஏஎஸ் ஆக வேண்டும் அதற்கு நிறை புத்தகங்கள் படிக்க வேண்டும், தினசரி செய்தித்தாள் படிக்க வேண்டும் என்று சுமார் 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார்.

 

The collector wedding gift ...

 

தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள்  கிராம வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று கிராம இளைஞர்களுடன் இணைந்து நின்று கேட்டவருக்கு..
 

இழந்த மரங்களை மீட்க வேண்டும் அதற்கு கிராமத்தில் மரக்கன்றுகள் நடவேண்டும், நீர்நிலைகளில்தண்ணீரை நிரப்ப வேண்டும். அருகில் உள்ள களத்தூர், போன்ற கிராமங்களில் இளைஞர்களே இந்தப் பணியை  செய்து சாதித்துள்ளார்கள். கீரமங்கலம், கொத்தமங்கலம், ஏம்பல் போன்ற கிராமங்களில் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் இந்தப் பணிகளை செய்து வருகிறார்கள் என்றோம். அடுத்த நாளே இளைஞர்களை இணைத்து அப்துல் கலாம் கிராமவளர்ச்சிக் குழுவை உருவாக்கி பல வருடங்களாக மராமத்து செய்யப்படாத பெரிய ஏரியை மராமத்து செய்து குருங்காடுகள் அமைத்து மரக்கன்றுகளை நட்டார்.
 

திருநெல்வேலியில் சார் ஆட்சியர் என்றாலும் விடுமுறை நாட்களில் கிராமப்பணிகள். விவசாயத்திலும் ஆர்வமாக இருந்ததால் தென்னைக்குள் ஊடுபயிர் செய்ய அனுபவமிக்க விவசாயிகளிடம் நேரில் சென்று அனுபவங்களைக் கேட்டு மண்ணுக் கேற்ற பயிர் செய்யும் பணியையும் செய்ய தொடங்கினார். மிளகு நாற்று அவரது தென்னை மரங்களில் படர காத்திருக்கிறது.

இந்த சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ் திருமணம் புதன் கிழமை பேராவூரணி நீலகண்ட விநாயகர் ஆலயத்தில் நடந்து ஒரு மண்டபத்தில் விருந்து நடந்த போது நாம் சக பத்திரிகை நண்பர்களுடன் சென்று விவசாயத்தின் மீது பற்றுக் கொண்ட சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் - மருத்துவர் கிருஷ்ணபாரதி இணையருக்கு மரத்தினால் செய்யப்பட்ட ஏர் கலப்பையை கல்யாணப் பரிசாக கொடுத்தோம்.
 

கல்யாணத்திற்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார் சார் ஆட்சியர். 2 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்குகிறோம் இதில் ஆயிரம் கன்றுகளாவது நிச்சயம் வளர்க்கப்படும் என்றார்கள் மணவீட்டு இளைஞர்கள்.


 

The collector wedding gift ...

 

கை நிறைய மரக்கன்றுகளை அள்ளி மார்போடு அனைத்துச் சென்ற பெண்மணி.. 

கலெக்டர் வீட்டு கல்யாணத்தில கொடுத்தாங்க என்று பெருமையாக சொல்லிக் கொண்டு சென்றார். தான் உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டோம் என்று தான் பிறந்து வளர்ந்த ஊரை மறந்து செல்லும் பலர் மத்தியில் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தனக்கு மனைவியாக வருபவரும் தன் கிராமத்து மக்களுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று மருத்துவரை கரம் பிடிக்கும் முன்பே.. வார விடுமுறை நாட்களில் கிராமத்துக்கு வந்து கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க மணமகளும் சம்மதம் என்றதும் கரம் பிடித்துள்ளார். 
 

இதேபோல ஊரை காதலிக்கும் மேலும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக.. வாழ்த்துகள் இணையர்களுக்கு.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.