தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். இரண்டு நாட்களாக நான் அடைந்த மனவேதனையும், மனவலியும் சொல்லமுடியாதவை. எண்ணிப்பார்க்கிறேன் என் தமிழ் சமூகத்தின் இளம் பிள்ளைகள் 17 வயது, 22 வயது என்று இந்த சமூகத்தின் வாழ்வாங்கு வாழவேண்டிய எம் பிள்ளைகள் இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து என் வேதனை எல்லையில்லா அளவிற்கு அதிகரித்துள்ளது.
அடிப்படையில் நான் ஒரு சுதந்திர நாட்டின் குடிமகன். என் நாட்டினுடைய சகமக்களின் துயரத்திலும், சோகத்திலு பங்கெடுக்கவேண்டிய கடமை எனக்கு உண்டு. அதனடிப்படையில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை பொறுத்தவரைக்கும் என் தமிழ் சமூகத்தின் அறம் சார்ந்த, நியாயமான முன்னெடுப்புகளுக்கு என்றைக்கும் என்னுடைய தார்மீக ஆதரவு உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.