மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்நடந்தது. ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் பல்வெறு துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

collector meeting with farmers

Advertisment

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அவரவர் பகுதி சார்ந்த பிரச்சினைகளை தெரிவித்தனர். அதன்படி “மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் நமது மாவட்ட எல்லைக்கு வரும்போது கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு பயிர்கடன் அளவை நிர்ணயித்து இழப்பீடு வழங்காமல், கூடுதல் மகசூலுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரை சேமிக்க நீர்பாசன கருத்தரங்கை நடத்த வேண்டும். பொதுசேவை மையங்களில் பயிர்காப்பீடு செய்ய விண்ணப்பிக்கும் போது உரிய ஆவணங்கள் பதிவேற்றம் ஆகி இருப்பதை உறுதி செய்யும் வகையில் சான்று வழங்க வேண்டும்.

புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றி வடிகால் வசதி செய்து தர வேண்டும், எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் எதிர்ப்புள்ள நாட்டு பசுமாடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் வட்டம் கூடலையாத்தூர் மற்றும் கீரனூர் குணமங்கலம் இடையே தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டு புதுக்கூரைப்பேட்டை, விஜயமாநகரத்தில் வழங்கப்பட்ட மாற்று இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும்.

Advertisment

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை வழங்கிய அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகளை சேர்ந்த கரும்பு விவசாயிகளுக்கு உரிய பணத்தை உடனடியாக ஆலை நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும், மக்காச்சோளத்துக்கு பயிர்காப்பீடு செய்ய கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும். கூடுதல் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். விவசாயிகள் பெயரில் ஆலைகள் வாங்கிய கடனை ஆலை பெயருக்கே மாற்றம் செய்ய வேண்டும் ““ என பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர்.

இவைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பேசும்போது, “சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.17 கோடியே 56 லட்சம் வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்த தொகை தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்கப்படும். கரும்பு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க அனுமதிக்கப்பட்ட மானிய தொகையை விட கூடுதலாக உதிரிபாகங்கள் வாங்குவதற்கு ரூ.26 ஆயிரம் முதல் ரூ.49 ஆயிரம் வரை ஆகும். கூடுதல் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.