
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு துணை மின்நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் சக பெண் ஊழியர்களை, ஆபாசமாக சித்தரித்து மெயில் அனுப்பிய விவகாரம் தற்போது வெளியே கசிந்து அரசுத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 25 நாட்களுக்கு முன்பு வத்தலக்குண்டு துணை மின்நிலையத்தில் பணிபுரியும் உதவி மின் பொறியாளர் ஒருவரின் மெயில் ஐடியில் இருந்து, வத்தலக்குண்டு கோட்டத்தில் உள்ள அனைத்து மின் உதவி பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் என அனைவருக்கும் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்த மெயிலில், ‘இரவு நேர இன்பத்திற்கு அழைக்கவும் விடிய விடிய ரூ.100 என அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் பெயர் மற்றும் செல் நம்பரை பதிவிட்டு அதற்கு கீழே அப்பப்போ.. இலவசம்’ என மற்றொரு பெண் ஊழியர் பெயர் மற்றும் அந்தப் பெண் ஊழியரின் செல்போன் நம்பரை பதிவிட்டு இந்த வாசகங்கள் அடங்கிய மெயில் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
அதை பார்த்து விட்டு கதறி அழுதவாறே பாதிக்கப்பட்ட இரண்டு பெண் ஊழியர்கள், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் உடனே புகார் அளித்தனர். அது போல் திண்டுக்கல்லில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் இருக்கும் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், அங்கு வழக்குப்பதிவு செய்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. பெண் ஊழியர்களைப் பற்றி தவறாக மெயில் அனுப்பிய அந்த ஊழியர், உயர் அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்க விடாமல் உயர் அதிகாரிகள் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் வக்கிரபுத்தி கொண்ட அந்த ஊழியர் தங்கள் கண் முன்னே அலுவலகத்தில் நடமாடுவதை சகிக்க முடியாமல் நாள்தோறும் அந்த பெண் ஊழியர்கள் மனம் நொந்து போய் வருகிறார்கள்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட அந்த இரண்டு பெண் ஊழியர்களும், முதலமைச்சர் தனிப்பிரிவு துறை அமைச்சர் மற்றும் மின்வாரிய இயக்குநர் ஆகியோருக்கு புகார் மனுவும் அனுப்பியுள்ளனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ‘சம்பவம் நடந்த 14.5.25ம் தேதி நாளன்று மதியம் சுமார் 12:19 மணிக்கு பாதிக்கப்பட்ட நாங்கள் இருவரும் அலுவலக அறையை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் எங்கள் பெண்மையை கலங்கப்படுத்தும் விதமாக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அலுவலகத்தில் பணிபுரியும் பாஸ்கரன் என்பவரது ஐடியில் இருந்து இமெயில் வத்தலக்குண்டு மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அலுவலக ரீதியாகவும், காவல்துறை ரீதியாகவும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தங்களைப் பற்றி அவதூறாக மெயில் அனுப்பிய பாஸ்கரன் என்பவர் வத்தலக்குண்டு மின் பகிர்மான கழக செயற் பொறியாளர்(Ee) கருப்பையாவின் உறவினர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். எனவே தங்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
அந்த பெண் ஊழியர்களின் குற்றச்சாட்டு குறித்து வத்தலக்குண்டு செயற்பொறியாளர் கருப்பையாவிடம் செல்போன் மூலம் கேட்ட போது, ‘இது தொடர்பாக துறை ரீதியாகவும் புகார் கொடுத்து இருக்கிறோம். சைபர் கிரைம் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது’ என்றவரிடம் பாஸ்கரன் உங்கள் உறவினர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் கூறுகிறார்களே? என்று கேட்டதற்கு, ‘ஆதாரமில்லாமல் யார் மேலேயும் நடவடிக்கை எடுக்க முடியாது. உரிய ஆதாரம் கிடைத்தால் தான் நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்று கூறினார். இந்த குற்றச்சாட்டை பற்றி விளக்கம் கேட்க பாஸ்கரனை (AE) தொடர்பு கொண்டும் லைனில் பிடிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் (SC) பிரபாகரனிடம் கேட்டபோது, ‘அது தொடர்பாக நிர்வாக ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. அதோடு போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டு இருப்பதால் கூடிய விரைவில் யார் என்ற உண்மையும் வெளியே வரும். அதன் மூலம் சட்டரீதியாகவும் துறை ரீதியாகவும் நடவடிக்கை இருக்கும்’ என்று கூறினார். ஆனால், இரண்டு அரசு பெண் ஊழியர்களை ஆபாசமாக பாலியல் உறவுக்கு அழைப்பது போல் சித்தரித்து ஈமெயில் மூலம் பரப்பிய சம்பவம் 25 நாட்களுக்கு மேலாகியும் கூட இன்னும் சைபர் க்ரைம் போலீசிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இப்படி ஒரு அதிரச்சியான சம்பவம் நடந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கவும் தயாராகி வருகிறார்கள் என்ற பேச்சும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.