Advertisment

“எங்களுக்கு சுடவும், குண்டு வைக்கவும் தெரியும்; தமிழக அரசை எச்சரிக்கிறேன்” - முன்னாள் இராணுவ வீரர்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இராணுவவீரர் பிரபு மற்றும் கவுன்சிலரான சின்னசாமிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தத் தகராறு கைகலப்பாக மாறியது. இதில், இராணுவ வீரர் பிரபுவுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு பிறகு மரணமடைந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். அந்தப் போராட்டம் இன்று (21ம் தேதி) சென்னையில் நடந்தது. இதில் பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல்.பாண்டியன் என்பவரும் கலந்து கொண்டார்.

Advertisment

காலை துவங்கிய இந்த போராட்டத்திற்கு பிற்பகல் 12 மணி அளவில் அண்ணாமலை வந்து கலந்து கொண்டார். முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கர்னல். பாண்டியன், “எங்களுக்கும் குண்டு போடவும், துப்பாக்கியால் சுடவும் தெரியும்” என்றார். இதற்கு அங்கிருந்த செய்தியாளர்கள், “நீங்கள் பேசுவதே பெரும் மிரட்டல் தொனியில் இருக்கிறதே” என்று தெரிவித்தனர். அதற்கு அவர், “திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்திகளை போடுவதேயில்லை” என்று அவர் தெரிவித்தார். இதனால், செய்தியாளர்களுக்கும், கர்னல். பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கரு.நாகராஜன், சமாதானம் செய்து வைத்தார்.

அதன்பிறகு போராட்ட மேடைக்கு சென்ற கர்னல். பாண்டியன் பேசும்போது மீண்டும், “ஒரு விஷயத்தை தமிழக அரசுக்கு எச்சரிக்கிறேன். உலகத்திலேயே இரண்டாவது பெரிய ஆர்மி இந்தியன் ஆர்மி அதுமட்டுமல்ல, உலகத்திலேயே ஒழுக்கமான ஆர்மி. அப்படிப்பட்ட இராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கும் தமிழக அரசுக்கும் நல்லதல்ல. எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது.

இதை நான் அன்பாக சொல்கிறேன்; இங்கே அமர்ந்திருக்கும் அனைத்து முன்னாள் இராணுவ வீரர்களும் குண்டு வைப்பதிலும், சுடுவதிலும், சண்டையிடுவதிலும் கெட்டிக்காரர்கள். இந்த வேலைகள் எல்லாம் எங்களுக்கு நன்றாகத்தெரியும்; ஆனால் இதை எல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றார்.

கர்னல். பாண்டியன், போராட்ட மேடையில் அண்ணாமலையின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe