Coimbatore Police arrested two in drug case

Advertisment

கோவை மாவட்டத்திற்கு எஸ்.பி.யாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஞ்சப்பள்ளி அருகே அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுவதாக எஸ்.பி.செல்வநாகரத்தினத்திற்கு தகவல் வந்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் இன்று அன்னூர் கஞ்சப்பள்ளி செக் போஸ்ட் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பீஷ்வர் சாகு(29), அலோக் நாயக்(21) என்பதும், சட்டவிரோதமாக 5.2 கிலோ கஞ்சாவினை விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 5.2 கிலோ கஞ்சா, இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்திச் சிறையிலடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.