கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து ஜி.என்.மில்ஸ் பஸ் நிறுத்தம் வழியாகக் கணபதி செல்லும் உருமாண்டம்பாளையம் சாலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அத்திக்கடவு குடிநீர் கொண்டு வர, சாலையில் ஒரு பகுதியைத் தோண்டி ராட்ஷச குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. பின்பு அந்தக் குழி மூடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மண் மூடப்பட்ட சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமலும், சில வாகனங்கள் அந்தக் குழிகளில் சிக்கின. மேலும், டூவிலரில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்களில் சிலர், அந்தக் குழியில் விழுந்து சிறு சிறு காயங்களுடன் விபத்துகள் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து கோயமுத்தூர் மாவட்டச் சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் உருமாண்டம்பாளையம் ஊர்ப் பொதுமக்கள், கோவை மாவட்ட வடக்கு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு குழிகளை மூடி சாலையைச் சரி செய்யக் கோரிக்கை வைத்தனர்.
ஆனாலும், இதுகுறித்து அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சாலைகளிலுள்ள குழிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதன் காரணமாக இருபுறமும் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன. இதற்காகக் கோயமுத்தூர் மாவட்டச் சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் உருமாண்டம்பாளையம் ஊர்ப் பொதுமக்கள் இணைந்து குழி தோண்டப்பட்டுள்ள இடத்தில், "இங்குள்ள சாலையைக் காணவில்லை", "நெடுஞ்சாலையில் கிணறுகள்", "இந்தச் சாலையை எடுத்துச் சென்றது யார்?" என்று ஃப்ளக்ஸ் வைத்துள்ளனர்.
மேலும், அங்கு தோண்டப்பட்டுள்ள குழியின் முன்பு நின்று பூக்கள், தேங்காய், பழம் வைத்து, 'பூமாதேவியே நீயே எங்களுக்குத் துணை', 'இந்தப் பகுதியில் வாகன விபத்துகள் நடக்காமல் இருக்க உறுதுணையாக இருக்க வேண்டும்; காப்பாத்து' என்று பூஜை செய்து நூதன முறையில் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.