Advertisment

கோவை எம்.எல்.எம். நிறுவனத்தினர் மீது வழக்குப்பதிவு!

Coimbatore MLM Prosecution against the company

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சக்தி ஆனந்தன் என்பவர், தனியார் எம்.எல்.எம் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும், இந்த நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு யூடியூப் சேனலும், செயலி ஒன்றும் இயக்கி வந்துள்ளார். இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் ஈட்டலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், எம்.எல்.எம் நிறுவனத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்தால் அதற்கேற்ப நிறுவனப் பொருள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாகப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். மேலும், தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

Advertisment

இதனையடுத்து, இந்த யூடியூப் சேனலைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கடந்த 19 ஆம் தேதி இந்த நிறுவனத்திற்கு எதிராக பா.ம.க நிர்வாகி ஒருவர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் (28-01-24) இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களையும், கோவை புறவழிச் சாலையில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கூடுமாறு உரிமையாளர் சக்தி ஆனந்தன் குறுஞ்செய்தி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment

அதன் பேரில், நேற்று (29-01-24) அந்த பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு குவிந்தனர். அப்போது அவர்கள், இந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூறினர். மேலும் அவர்கள், இந்த நிறுவனம் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாகவும், இதன் மூலம் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் அந்த பகுதிக்கு வந்து, நிறுவனத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுப்பினர்களிடம் உறுதி அளித்தார். அந்த உறுதியின் அடிப்படையில், அங்கிருந்த பொதுமக்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் மைவி 3 ஆட்ஸ் என்ற தனியார் எம்.எல்.எம் நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியானந்த் உள்ளிட்டோர் மீது கோவை சிங்காநல்லூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் கோவையில் நேற்று திரண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எனப் பலருக்கும் இடையூறு ஏற்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

VAO police Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe