திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மகன் நவீன்குமார் (22). கோவை ஒத்தக்கல்மண்டபம் அருகே உள்ள பிரிமியர் மில்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார்.
தற்போது கரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடந்துவரும் நிலையில், நவீன்குமார் இரண்டாம் ஆண்டில் வைத்த அரியர் தேர்வு எழுத கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.
மாணவர் நவீன்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் 3 நாட்கள் நவீனுடன் அவரது தாயார் தங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை நவீனின் தாயார் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மாலையில் அவரது தாய், நவீன் செல்ஃபோனுக்கு அழைத்துள்ளார்.
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் பதில் இல்லாததால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் சென்று பார்த்தபோது நவீன்குமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினர் செட்டிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்குவந்த போலீசார், நவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் நவீன்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.