
கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்குக் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளிகளான மனோஜ் குமார் - ரோஷிணி தம்பதியர் குடியேறி உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியின் 7 வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று அந்த சிறுமியை, அவரது தாய் கண்முன்னே தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் சிறுமியை வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் அடித்து சிறுமியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுமக்களும் வனத்துறையினருடன் சேர்ந்து தேயிலைத் தோட்டத்தில் சிறுமியைத் தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்குக் குழுமி உள்ளனர். தாய் கண்முன்னே 7 வயது சிறுமியைச் சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.