Skip to main content

சிறுமியின் மரபணு சோதனையில் மேலும் ஒரு நபர்!- மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு உத்தரவு!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கோவையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவுக்கு, 4 வாரங்களில் பதிலளிக்க துடியலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கஸ்தூரி நாயக்கன் புதூரில் தங்கி இருந்து, அங்கு வசிக்கும் வயதான தனது பாட்டியை கவனித்து வந்தார். இந்நிலையில், 2019 மார்ச் 25-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, உடலை வேறு இடத்தில் வீசி சென்று விட்டார்.

coimbatore child incident case judgement chennai high court

இது தொடர்பாக விசாரணை நடத்திய துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், சந்தோஷ்குமாரை கைது செய்து, அவருக்கு எதிராக கொலை குற்றசாட்டின் கீழும், போக்சோ சட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.
 

இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை விதித்து 2019 டிசம்பர் 27 -ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சந்தோஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
 

அந்த மனுவில், சிறுமியின் மரபணு சோதனையில், மேலும் ஒரு நபர் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறிய போதிலும், அது குறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிடாமல், அவசர அவசரமாக வழக்கை விசாரித்து தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்ட இந்தக் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் சுப்பையா மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க துடியலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.