கோவை விமான நிலையத்தில் மீண்டும் தோட்டா பறிமுதல்!

coimbatore airport incident 

கோவை விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நேற்று (14.06.2025) வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெங்களூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பெண் பயணி ஒருவரின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 9எம்.எம். ரக தோட்டா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவரது பெயர் சரளா ராமகிருஷ்ணன் எனத் தெரியவந்தது. அவரிடம் இருந்து தோட்டாவைப் பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உடனடியாக பீளமேடு காவல் துறையிடம் அவரை ஒப்படைத்தனர்.

பீளமேடு காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ரம்யா ராமகிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை சேர்ந்த ராமகிருஷ்ணா குழுமா அறக்கட்டளையின் அறங்காவலர் மனைவி என்று தெரிந்தது. பெங்களூருக்கு கிளம்பியபொழுது துப்பாக்கித் தோட்டாவைத் தெரியாமல் எடுத்து வந்ததாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சின் பகுதியைச் சேர்ந்த சிபு மேத்யூ என்பவர் அபுதாபி செல்வதற்காக இன்று (15.06.2025) கோவை விமானநிலையம் வந்துள்ளார். அங்கு அவரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர்.

அப்போது அவரது ஷூவின் அடிப்பகுதியில் தோட்டா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக தோட்டாவை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பரிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிபு மேத்யூவையும், தோட்டாவையும் பீளமேடு காவல் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் சிபு மேத்யூவிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கோவை விமான நிலையத்தில் தோட்டாவுடன் வந்திருந்த பயணியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

airport Coimbatore crpf police
இதையும் படியுங்கள்
Subscribe