Skip to main content

தேர்தலைக் கண்டு மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார்- முதல்வர் பழனிசாமி!

Published on 08/12/2019 | Edited on 08/12/2019

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் நேற்று (07.12.2019) அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (09.12.2019) முதல் தொடங்குகிறது.
 

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக கட்சியின் நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

coimbatore airport cm palanisamy press meet

இதனிடையே கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, "உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்திவிட்டார். அதிமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும். எந்த மாவட்டத்தில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஆட்சேபனை இருக்கிறது? இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது.


தேர்தலை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என நாங்கள் தற்போது கேட்கிறோம். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயங்குகிறது, அஞ்சுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுவிட்டு மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின். தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் திட்டம். மக்களிடம் விஷமத்தனமான தகவலை பரப்பி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் ஸ்டாலின். மக்கள் வாக்களித்துதான் பிரதிநிதி தேர்வு செய்யப்படுகிறார், பிறகு ஏன் மக்களை சந்திக்க ஸ்டாலின் அஞ்சுகிறார். தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்டதாக 3 ஆண்டு காலமாக ஸ்டாலின் கூறிக்கொண்டு தான் இருக்கிறார்" இவ்வாறு முதல்வர் பேசினார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.