கூட்டுறவு தேர்தல் - வேட்பு மனு தாக்கல் விவகாரத்தில் ஆளும் கட்சி அராஜகம் அதிகமாக உள்ளது என சி.பி.ஐ.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதுமுள்ள 18775 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஐந்து கட்டமாக நடத்திட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தல் 12.3.2018 அன்று துவங்கி 28.4.2018 வரை நான்கு நிலையில் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் 4698 சங்கங்களுக்கான வேட்புமனு தாக்கல் 26.3.2018 அன்று துவங்கியது. வாக்காளர் பட்டியல் வெளியிடுவதிலேயே பெரும் குளறுபடி நடைபெற்றுள்ளது. கூட்டுறவு சங்கங்களிலிருந்து போட்டியிடக் கூடிய அனைவருக்கும் விநியோகிக்கப்பட வேண்டிய வேட்பு மனு படிவங்கள் ஆளும் கட்சியினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால் வேட்பு மனு தாக்கலின் போது பல்வேறு இடங்களில் தள்ளுமுள்ளு, தடியடி, மறியல், சங்கங்கள் முன்பான போராட்டம் என மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் உள்ளது. நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனையின் போது அதிகாரிகள் கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலகத்திற்கு வராமல் காலம் கடத்தியுள்ளனர்.
வேட்புமனு பரிசீலனையிலும் ஆளும் கட்சியினர் குறிப்பிடும் வேட்பு மனுக்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு செய்து இதர மனுக்களை நிராகரித்துள்ளனர். வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான காரணங்களை எழுத்துப் பூர்வமாக வழங்காமல் கையெழுத்து சரியில்லை என்பது போன்ற சொத்தை காரணங்களை கூறி வேட்பு மனுக்களை நிராகரித்துள்ளனர். பெரும்பாலான சங்கங்களின் தேர்தல் அதிகாரிகள் வரவில்லை, அப்படி வந்தவர்களும் 3 மணி அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர் எனக் கூறி சென்று விட்டனர். மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் எவ்வித முயற்சியும் எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவு கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் சுமை எனக் கூறி தேர்தல் நடத்தாமல் ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதுபோன்று கூட்டுறவு சங்க அதிகாரிகளின் நடத்தை, கூட்டுறவு தேர்தல் தொடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்கு முரணானது.
சுதந்திரமான மற்றும் முறையான தேர்தல் நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கு மாறாக ஆளும் கட்சியினர் நடத்தும் அராஜகத்திற்கு தேர்தல் அதிகாரிகள் உடந்தையாகயிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எவ்வித ஜனநாயகத்திற்கும் இடமளிக்காமல் அராஜக முறையில் தேர்தல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது. ஆட்சேபணை எழுப்பப்பட்டுள்ள இடங்களில் மறு தேர்தல் தேதி அறிவித்து ஜனநாயகப்பூர்வமாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை, அராஜகத்தை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கூட்டுறவு தேர்தல் - வேட்பு மனு தாக்கலில் ஆளும் கட்சி அராஜகம்! சிபிஐஎம் கண்டனம்!
சார்ந்த செய்திகள்
Next Story
“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.
அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனக்கூறினார்.
Next Story
'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?
அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.
இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.