தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு,இருவரும் உயிரிழந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த தந்தை, மகன்பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அதேபோல் இதுகுறித்து ஜெயராஜின் மகள் பெர்சி கூறுகையில், அம்மாவின் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் தந்தை, சகோதரன் உடலை பெறுகிறோம். உயர்நீதிமன்ற கிளை நேரடியாக விசாரிப்பதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குஉள்ளது. தந்தை சகோதரன் மீது படிந்துள்ள கைரேகை தடயம் மூலம் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த தந்தை, மகன் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற திமுக எம்பி கனிமொழி தந்தை, மகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், “முதல்வரின் கூற்று அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த தந்தை, மகன் இருவரும் உடல்நலக்குறைவால் இறந்ததாக முதல்வர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என தெரிவித்தார்.