Skip to main content

தேனியில் பிரச்சாரம்; கட்சிப் பொறுப்பாளர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
cm Stalin order to Theni party officials to make the candidates successful

தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் தேனி லட்சுமி புரத்தில் இன்று மாலை நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்காக நேற்று இரவு 9.30 மணிக்கு தேனி வந்த முதல்வர் ஸ்டாலினை தொகுதி பொறுப்பாளரும் அமைச்சருமான ஐ.பெரியசாமி வரவேற்றார். அதைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட செயலாளரும் வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சரவணக்குமார், மகாராஜன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் முதல்வருக்கு சால்வை, மாலை அணிவித்து வரவேற்றனர்.

cm Stalin order to Theni party officials to make the candidates successful

அதைத் தொடர்நந்து கம்பம் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில்  முதல்வர் ஸ்டாலின் தங்கினார். அதன் பின் தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அழைத்து தொகுதி நிலவரம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.  பின்னர் நமது வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும், அதற்காக நீங்கள் இரவு பகல் பாராமல் பணியாற்ற வேண்டும், என்று முதல்வர் அதிரடி உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார்.

இதையடுத்து, இன்று காலை 7 மணிக்கு பெரியகுளம் ரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு வாக்கிங் வந்தார். மெயின்  ரோட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள சந்தைக்கு நடந்து சென்றார். அவருடன் அமைச்சர் ஐ.பெரியசாமி  மற்றும் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் ராமகிருஷ்ணன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது செல்லும் வழியில் வியாபாரிகள், பொதுமக்களிடம் நலம் விசாரித்து செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது அவர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். பிறகு சந்தைக்குள் சென்று சுற்றி பார்த்து விட்டு, தேனி ஃபாரஸ்ட் ரோட்டில் உள்ள டீக்கடை ஒன்றில் முதல்வர் டீ குடித்தார். அமைச்சர் ஐ.பெரியசாமி, வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் அமர்ந்து டீ குடித்தார்.

cm Stalin order to Theni party officials to make the candidates successful

இதையடுத்து தனியார் ஹோட்டலுக்கு ஓய்வெடுக்க சென்று விட்டு, மாலை லட்சுமிபுரத்தில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேனி பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருக்கிறார். 

இதற்கான முன்னேற்பாடுகளைத் தொகுதி பொறுப்பாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.