Skip to main content

முதல்வரின் ஒரு நாள் வருகைக்கு பளபளன்னு புது ரோடு... நாங்க இறந்தவர் உடலை வயலில் இறங்கி தூக்கிச் செல்கிறோம்... 40 ஆண்டு அவலம்...

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

ddd

 

தமிழக முதல்வர் உள்பட மத்திய மாநில அரசாங்க பிரதிநிதிகள், எந்த ஊருக்குப் போனாலும், சொகுசு கார்களில் செல்லும் போதும்கூட, குலுங்காமல் செல்ல வேண்டும் என்பதற்காக பல வருடங்களாகப் பள்ளமும் படுகுழியுமாக உள்ள சாலைகளை இரவு பகலாக வேலை பார்த்து பளபளக்கும் சாலைகளாக்குகிறார்கள்.

 

ஆனால், பல கிராமங்களில் இறந்தவர் உடலை, மயானத்திற்குக் கொண்டு செல்ல பாதை இல்லாமல், பயிர்கள் வளர்ந்துள்ள வயலுக்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை இப்போது வரை உள்ளது வேதனை அளிக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நாகுடி அருகில் உள்ளது கீழ்குடி கிராமம். சுமார் 200 குடும்பங்கள் வரை வசிக்கிறார்கள். இந்த கிராமத்தில் யார் இறந்தாலும் அவர்களை மயானத்திற்கு தூக்கிச் சென்று இறுதிச் சடங்குகள் செய்ய படாதபாடுபடுகிறார்கள் உறவினர்கள்.

 

அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சிவகுமார் - வெள்ளையம்மாள் தம்பதிகளின் ஒரே மகன் திருக்குமாரன் (வயது 17). அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்தார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குப் போனபோது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி. கனையத்தில் பிரச்சனை என்று சொன்னார்கள். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்ல, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நேற்று 8 ஆவது நாளில் 'நீங்க ஊருக்குப் போகலாம்' என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியே அனுப்பியது. 

 

Ad

 

துணைக்கு இருந்த தாய் வெள்ளையம்மாளிடம், 'காரில் ஊருக்கு போக ரூ3 ஆயிரம் வேணும், எதுக்கும்மா இவ்வளவு செலவு செய்யனும், பஸ்ல போவோம்' என்று திருக்குமரன் நேற்று மாலை ஊருக்கு வந்து சேர்ந்தார். 

 

உறவினர்கள், நண்பர்கள் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். இரவு 8 மணிக்கு மாத்திரை சாப்பிட்டுப் படுக்கப்போன திருக்குமரன் 10 மணிக்கு ஃபிட்ஸ் வந்து துடிக்க மீண்டும் நாகுடி, அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் பயனில்லை. சிறுவனின் உயிர் போய்விட்டது. உறவினர்கள் கூடி அறுவை சிகிச்சையில் கோளாறு இருக்கிறது என்று சொன்னார்கள்.

 

dddd

 

இன்று காலை அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்குக் கொண்டு செல்ல தூக்கிச் சென்றார்கள். சிறிது தூரத்தில் பாதை முடிந்து பயிர்கள் போர்த்திய வயல்கள் தான் தெரிந்தது. அந்த வயல்களில் இறங்கி பயிர்களை மிதித்துக் கொண்டே திருக்குமரன் சடலத்தை தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர்.

 

மயானத்தற்குச் சாலை இல்லையா? என்ற கேள்விக்கு, "கிட்டதட்ட 40 வருடத்துக்கு மேல இப்படித்தான் பாதை இல்லாமல் வயல்களில் பயிர்களை மிதிச்சுகிட்டு சடலங்களை சுமக்கிறோம். அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. பாதை இல்லைன்னு சடலத்தை வீட்டிலேயேவா வைத்திருக்க முடியும். வயல்களில் இறங்கி நடக்கிறோம். எங்க ஊருக்கு எப்பதான் மயானச் சாலை போடுவாங்களோ... நாடு முன்னேறிடுச்சுன்னு மேடை பேச்சுக்கு வேணும்னா பேசலாம், சுடுகாட்டுக்குப் போவ பாதை இல்லாத எத்தனையோ கிராமங்கள் இருக்கு. அதில் ஒன்னு கீழ்குடி. மாவட்ட ஆட்சியராவது தலையிட்டு மயான சாலை அமைத்துக் கொடுக்கனும்" என்றனர் உறவினர்கள்.

 

Nakkheeran

 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கரோனா குறித்த ஆய்வுக்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22 -ஆம் தேதி வருகிறார். அவர் செல்லும் வழி விராலிமலை. அதனால் கடந்த சில நாட்களாக வழியெங்கும் பதாகைகள் வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நல்லா இருக்கும் சாலைகள் உள்பட பல வருடங்களாகப் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாகக் கிடந்த சாலைகளும் வேகமாக புதிய சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால், அதே மாவட்டத்தின் கீழ்கோடியில் உள்ள கீழ்குடியில் பல வருடங்களாக மயானத்திற்குச் சடலத்தைக் கொண்டு செல்ல ஒரு சாலை இல்லை என்பது வேதனையிலும் வேதனை.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.