ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி!

11:55 AM Apr 03, 2024 | prabukumar@nak…

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

ADVERTISEMENT

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக, இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த காலியிடத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள முனைவர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர். அரசியல் பயணம் முழுவதும் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது. உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நீங்கள் மாறும்போது, இந்திய நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தி.மு.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT