
தமிழ் மொழியின் இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ்ச்சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
2021ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள், ஜனவரி மாத இறுதியில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, நெல்லை கண்ணன்- இளங்கோவடிகள் விருது, பாரதி கிருஷ்ணகுமார்- மகாகவி பாரதியார் விருது, புலவர் செந்தலை கவுதமன்- பாவேந்தர் பாரதிதாசன் விருது, சூர்யா சேவியர்- சொல்லின் செல்வர் விருது, கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்- சிங்காரவேலர் விருது, நாஞ்சில் சம்பத்- பேரறிஞர் அண்ணா விருது, முனைவர் சஞ்சீவிராயர்- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, உயிர்மை திங்களிதழுக்கு- சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது, முனைவர் அரசேந்திரன்- தேவநேயப்பாவாணர் விருது, நா.மம்மது- உமறுப்புலவர் விருது, முனைவர் ராசேந்திரன்- கி.ஆ.பெ.விருது, பாரதி பாஸ்கர்- கம்பர் விருது, ஏ.எஸ்.பன்னீர் செல்வம்- ஜி.யு.போப் விருது, சுகி.சிவம்- மறைமலையடிகள் விருது, ஞான.அலாய்சியஸ்- அயோத்திதாசப் பண்டிதர் விருது, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்- தமிழ்த்தாய் விருது ஆகிய விருதுகள் மேற்கண்டவருக்கு வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்கள் அனைவருக்கும் தலா 2 லட்ச ரூபாயும் ஒரு சவரன் தங்கப்பதக்கத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், "இரண்டாயிரம் ஆண்டுக்காலம் பழமையான தமிழ் என்று இதுவரை கூறிக்கொண்டு இருந்தோம். ஆனால், தற்போது கிடைத்திருக்கும்படி ஆய்வுகளின்படி பார்த்தால் 3,500 ஆண்டுகள் பழமையானது தமிழ்" எனத் தெரிவித்தார்.