மதுரை மாநகராட்சியில் உள்ள தனியார் கட்டடங்கள், வீடுகளுக்குச் சொத்து வரியைக் குறைவாக நிர்ணயித்துப் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரங்கராஜன், மண்டல தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன் உதவி வருவாய் ஆய்வாளர் குமார் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சியின் மண்டல தலைவர்களான பாண்டி செல்வி சரவண புவனேஸ்வரி சுபிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். இத்தகைய சூழலில் தான் இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களான மூர்த்தி, தியாகராஜன் மற்றும் மாநகராட்சியின் ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் இன்று (07.07.2025) விசாரணை நடத்தினர். அதாவது  மேயர் இந்திராணி, திமுக மண்டல தலைவர்களான பாண்டிச்செல்வி, சரவண பூவனேஸ்வரி, சுமிதா மற்றும் முகேஷ் சர்மா ஆகிய 4 பேரும், மேலும் நகரமைப்பு மற்றும் வரிவிதிப்பு குழு தலைவர்களான மூவேந்தன் மற்றும் கரன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்குப் பின்னர் சரவண புவனேஸ்வரி, பாண்டிசெல்வி, சுபிதா,முகேஷ் சர்மா ஆகிய 4  மண்டல ராஜினாமா செய்துள்ளனர். அதோடு மேயர் இந்திராணிக்கு அமைச்சர் நேரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் மதுரை மாநகர மேயரின் கணவர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

அதே சமயம் இந்த முறைகேடு சம்பந்தமாக அதிமுக சார்பில் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நாளை (08.07.2025) மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளோடு தனித்தனியாகச் சந்தித்து வரும், “உடன்பிறப்பே வா” என்ற நிகழ்ச்சியில் பேசுகையில், “தேவையான இடங்களில் தயவு தாட்சணியம் இன்றி பதவியைப் பறிப்பேன்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.