அனைத்துதுறை வளர்ச்சித் திட்டப் பணிகளையும் கள ஆய்வு செய்வதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப். 15, 2023) தனி விமானத்தில் சேலம் வந்தார். அங்கு இரண்டு நாட்கள்கள ஆய்வில் ஈடுபடுகிறார்.
தமிழகத்தில்திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தி வரும் திட்டங்கள் முழுமை பெற்றுள்ளனவா? அவற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள், குறைகள் குறித்து ஆய்வு செய்யகள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதல் கட்டமாக பிப். 1 மற்றும் 2ம் தேதிகளில் வேலூர் மண்டலத்தில் ஆய்வு நடத்தினார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து, சேலம் மண்டலத்தில் பிப். 15, 16 ஆகிய இரு நாட்கள் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை (பிப். 15) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சேலம் வந்தார்.புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் விவசாயிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினருடன் கலந்துரையாடுகிறார். அதன்பிறகு, நான் முதல்வன் திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவமாணவிகளிடம் கலந்துரையாடுகிறார். இவ்விரு கூட்டங்களும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில் நடக்கிறது.
இதையடுத்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் மதிய உணவை எடுத்துக் கொண்டுசிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை 4.30 மணிக்குஅனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், துறை செயலர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் சேலம் மண்டலத்தில் நடந்து வரும் மற்றும் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆய்வு மாளிகையில் இரவு உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்கிறார்.மறுநாள் (பிப். 16) காலை 9.30 மணியளவில் மீண்டும் அனைத்துதுறை செயலர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மதிய உணவுக்குப் பிறகு தனி விமானத்தில் சென்னைக்கு கிளம்புகிறார்.
இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், சேலம் மாநகராட்சி ஆணையர், அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும்துறை செயலர்களும் கலந்து கொள்கின்றனர். முதல்வர் வருகையையொட்டிசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநகர காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கள ஆய்வு நடக்கும் அறைக்குள் செல்ல ஊடகத் துறையைச் சேர்ந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், கேமராமேன் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊடகங்களுக்குத் தேவையான செய்தி அறிக்கைகள், படங்கள், காணொளி காட்சிகள் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டு உள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் எழாத வகையில் காவல்துறை கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கள ஆய்வுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின்அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பால் பண்ணை, உழவர் சந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் என எங்கேயாவது திடீரென்று நேரடி ஆய்வுக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளதாக அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.இதுபோன்ற நேரடி ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏ, எம்பிக்கள் உள்ளிட்டோரும் உடன் வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. முதல்வர் எந்த இடத்திற்கு நேரில் ஆய்வுக்குச் செல்வார் என்ற எதிர்பார்ப்பும்பதற்றமும் அரசு அலுவலர்கள் தரப்பில் தொற்றிக் கொண்டுள்ளது. இதற்கேற்ப அனைத்து துறை பணியாளர்கள், ஆசிரியர்களையும் முதல்வர் ஆய்வு நடக்கும் இரண்டு நாட்களிலும் பணியில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.