
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 2 நாள் கள ஆய்வுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (15.06.2025) திருச்சி சென்றடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து கல்லணைக்கு மாலை சென்றார். அங்கு டெல்டா பாசனத்திற்கான குருவைச் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது தஞ்சைக்குச் செல்லும் வழியில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சை மணிமண்டபம் பகுதியில் வாகனத்திலிருந்து இறங்கி சாலையில் நடந்து சென்று தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது வழிநெடுகிலும் அவரை சந்தித்த பொதுமக்கள் அவருக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர். சால்வை அணிவித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் பயணித்தபடியும், சாலையில் நடந்தும் பொதுமக்களை (ரோடு ஷோ) சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குச் சாலையின் இருபுறமும் இருந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அச்சமயத்தில் அங்கிருந்த திமுக தொண்டர்கள், பொதுமக்களிடம் சென்று பேசினார். சிறிது தூரம் நடந்து சென்று பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். மேலும் குழந்தைகள், பெரியவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்பி எடுத்துக் கொண்டார்.
அதே போன்று பொதுமக்களும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இவ்வாறு 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து சென்றார். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவச் சிலையை வந்து திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று இரவு தஞ்சையில் ஓய்வெடுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (16.06.2025) காலை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

இதனையடுத்து அரசு சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அதோடு முடிவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் தஞ்சையில் இருந்து நாளை மாலை திருச்சி சென்றடைகிறார். அங்கிருந்து விமான மூலம் சென்னை செல்ல உள்ளார்.